)
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்துக்காக விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றால் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில், என்னென்ன திட்டங்கள், அந்த திட்டங்களால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன, யாரெல்லாம் பயனடைகின்றனர் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
விடியல் பயணம்
தமிழ்நாட்டில் செயல்படுத்தபடும் மகத்தான திட்டம் விடியல் பயணம் (Vidiyal Payanam) ஆகும். இந்த திட்டத்தினால், தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் பெண்களுக்கு பேருந்து கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்பது வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மகத்தான திட்டங்களில் ஒன்றாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டம் உள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக முன்னேற்றப் பாதைக்கு கொண்டும் செல்லும் திட்டமாகவும் அமைந்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிகணக்கில் நேரடியாக 1000 ரூபாய் மாதந்தோறும் செலுத்தப்படுகிறது. நிதிச் சுதந்திரத்தை கொடுத்திருக்கும் இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தற்போது 1.15 கோடி பெண்கள் நேரடியாக பயன்பெறுகின்றனர். இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை தொடங்கியதும் தமிழ்நாடு தான், அதிக பயனாளிகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருப்பதும் தமிழ்நாடு தான். அந்தவகையில் இதுஒரு வெற்றி திட்டமாகும்.
புதுமைப் பெண் திட்டம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்து கல்லூரி படிப்பைத் தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமே புதுமைப் பெண் (Pudhumai Pen Scheme) திட்டமாகும். இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியபிறகு உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருக்கிறது. இந்த திட்டம் பெண் கல்வியை ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கான நிதித் தேவைகளையும் பூர்த்தி செய்வதால், தமிழ்நாடு செயல்படுத்தும் சிறப்பான திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
பெண்கள் தோழி விடுதி
பணி நிமித்தமாக வெளி மாவட்டங்களில் இருந்து பிற இடங்களுக்கு சென்று பணிபுரியும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தொடங்கிய திட்டம் தான் இது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காகவே கட்டிக் கொடுத்துள்ளது. குறைந்த கட்டணம், சிசிடிவி பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் அரசு செய்து கொடுத்துள்ளது. தோழி விடுதிகள், பணிபுரியும் பெண்களுக்கு பேருதவியாக இருக்கிறது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாகவும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாகவும் வழங்கப்படும். இந்தத் தொகை குழந்தை 18 வயது முடிந்த பிறகு, வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும். மேலும், பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு, ஆறாம் வகுப்பு முதல் ஆண்டுக்கு 1,800 ரூபாய் கல்வி உதவித்தொகையும் அளிக்கப்படுகிறது.
மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தும் திட்டங்களில் முதன்மையானவையாக இருக்கின்றன. இதுதவிர இன்னும் சில திட்டங்களும் இருக்கின்றன. இந்த திட்டங்களை இங்கு பிரதானப்படுத்தி காட்டுவதற்கான முக்கிய காரணம், அதிக பயானிகளையும், நேரடியாக அதிகாமானோர் பயனடையும் திட்டங்களாவும் இவை இருக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ