)
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அந்த இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மதுரை மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்ததாக திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் விஜய். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விஜய் கட்சியுடன், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் மற்றும் டிடிவி கூட்டணி குறித்த பேச்சுகளுக்கு முக்கிய காரணம், கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அமமுக, சமீபத்தில் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. "துரோகம் தலைவிரித்தாடுகிறது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் இனியும் இணைய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து கொண்டு எங்கள் வழியில் செல்கிறோம்" என்று கூறிய தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு, பாஜக தங்களை புறக்கணிப்பதாக அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார். மேலும் எதிர்கால கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்து பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. "நடிகர் விஜய் மக்கள் விரும்பும் நடிகர், அவர் துணிச்சலாக ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். அதை பார்த்து பொறாமைப்பட வேண்டிய அவசியம் என்ன? கேப்டன் விஜயகாந்த் போல் ஒரு தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்று நான் கூறியது யதார்த்தம். இது விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்காக சொல்லவில்லை. ஆனால், நீங்கள் நினைக்காத ஒரு கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது" என்று பேசி இருந்தார். இது தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி உள்ளது.
தவெக மற்றும் அமமுக இணைந்தால் தமிழக தேர்தல் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு உள்ளது. அமமுகவிற்கு தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்த ஒரு பிரிவினரின் ஆதரவு டிடிவிக்கு இருக்கிறது. ஆனால், தனியாக போட்டியிட்டு பெரிய வெற்றிகளை பெற முடியாத நிலையில், ஒரு மக்கள் செல்வாக்குள்ள முகத்துடன் இணைவது அவர்களுக்கு பலம் சேர்க்கும். விஜய் மற்றும் டிடிவி இணைந்தால் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கியும் இணையும். அது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் வாக்குகளையும் பிரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், விஜய்யை மையமாக வைத்து ஒரு புதிய மூன்றாவது அணி உருவாகவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. விஜய்யும் கூட்டணிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் விஜய் தனித்து நிற்க வேண்டும் என்று ஒருபுறம் குரல்கள் எழுந்துள்ளது. பிப்ரவரி வரை யார் யாருடன் கூட்டணி என்ற பேச்சுக்கள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ