தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், காரைக்குடி அருகில் உள்ள புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், சில முக்கிய ஆவணங்களை மூலவர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் நடந்த தவெக மாநாட்டு கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னணி: கரூர் துயரச் சம்பவம்
சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். இந்த துயர சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பலரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அவருடன், கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.
அங்கு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் செய்து அவர் வழிபட்டார். அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, ஒரு கோப்பு கட்டை எடுத்து வந்து, அதனை மூலவர் கற்பக விநாயகரின் பாதத்தில் வைத்து பூஜை செய்தார். புஸ்ஸி ஆனந்த் கோவிலில் வைத்து பூஜை செய்தது, கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் கேட்கப்பட்ட முக்கிய ஆவணங்கள் என்று கூறப்படுகிறது. சிபிஐ தங்களை கோரியுள்ள கோப்புகளில் எந்த பிரச்சினையும் வந்துவிட கூடாது என்றும், இந்த வழக்கில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் அவர் விநாயகரிடம் மனமுருக வேண்டிக்கொண்டதாக, அவருடன் சென்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அது கட்சியின் சின்னத்திற்கு விண்ணப்பித்த ஆவணங்களாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் அரங்கில் அதிர்வலைகள்
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவிற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. விரைவில் விஜய் மீண்டும் மக்கள் சந்திப்பில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இதற்காக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் விஜய் திமுகவிற்கு நேரடி எதிரி நாங்கள் தான் என்று தெரிவித்துள்ளதால் அதிமுக சற்று அதிருப்தி அடைந்து இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









