)
TVK Cabinet Latest News : முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக இடம்பெறாது என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், விசிக தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுகிறதா என்பதை விரைவில் தெரிவிப்போம் என கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த மே 10ஆம் தேதி அன்று முதலமைச்சர் விஜய் தலைமையிலா அமைச்சரவை பொறுப்பேற்றது. விஜய் உள்பட மொத்தம் 10 பேர் மட்டுமே முதற்கட்டமாக அமைச்சரவையில் இடம்பெற்றனர். தொடர்ந்து, அமைச்சரவையில் இலாகா ஒதுக்கீடு செய்யவும் காலதாமதம் ஏற்பட்டது.
மே 16ஆம் தேதிதான் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும், இன்னும் பல முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் இல்லாமல் அரசுப் பணிகள் தேங்கியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த வகையில், அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்தன.
| மே 4 | தேர்தல் முடிவுகள் வெளியானது |
| மே 9 | ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைத்தார். |
| மே 10 | விஜய் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்பு |
| மே 16 | அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு |
அதேவேளையில், விஜய் தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளும் இடம்பெற இருப்பதால்தான் இந்த காலதாமதம் ஏற்படுகிறது என தவெக தரப்பில் கூறப்பட்டது. காங்கிரஸ் மட்டுமே அதிகாரப்பூர்வமாக தவெகவின் அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. கிள்ளியூர் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் மற்றும் மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோர் விஜய்யின் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை தவிர்த்து, தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த பிற கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறாது என்றும் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது, அதை மதிப்பதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் தங்களின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவினர் குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, "எங்களை நம்பிவந்த அதிமுகவினருடன் தோழமையுடன் இருப்போம். எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அவர்கள் உரிமை. அவர்களை சி.வி. சண்முகம் வழிநடத்துகிறார். சட்ட சிக்கல் வந்தால் சி.வி. சண்முகம் சந்திப்பார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பது வேண்டுகோள்" என்றார்.
இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் "அமைச்சரவையில் இடம்பெற அழைப்புவிடுத்ததை மதிக்கிறோம், அதற்கு நன்றி. கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்" என்றார். மேலும் அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் ஒரு பிரிவினருக்கு (எஸ்.பி.வேலுமணி - சி.சண்முகம்) அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பில்லை என தவெக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சரவையில் பங்கேற்பதற்கு குறித்து அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படும் நிலையில், திருமாவளவன் அதற்குள் நிச்சயம் ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்தாலும் திமுக உடனான கூட்டணியில் நீடிப்பதாக திருமாவளவன் பேசியிருந்தார், இதனால் அவர் அமைச்சரவையில் இடம்பெறுவதில் சிக்கல் இருந்தது. எனவே, அதுகுறித்தும் திருமாவளவன் தீவிரமாக ஆலோசிப்பார் என தெரிகிறது. ஒருவேளை அமைச்சரவையில் இடம்பெற்றால் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பொறுப்போ அல்லது முக்கிய துறையோ ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் எதுவும் இன்னும் உறுதியாகவில்லை.