)
கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் நடந்த தமிழக வெற்றிக் கழககூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய், விரைவில் கரூருக்கு சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து, அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

கரூர் துயர சம்பவம் நிகழ்ந்த பிறகு தனது பயணங்களை ரத்து செய்து, இரங்கல் மற்றும் நிதியுதவியை அறிவித்திருந்த விஜய், இதுவரை பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை. இந்த நிலையில், திங்கட்கிழமை காலை, தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து புறப்பட்ட விஜய், பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், மதியம் முதல் இரவு 8 மணி வரை, சுமார் பல மணி நேரம் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கரூர் துயர சம்பவம், அதற்கான காரணங்கள், கட்சியின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விஜய் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில், அவரது வருகையின் போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க, உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்ய தவெக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவை பெற்ற பிறகே, விஜய்யின் கரூர் பயண திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
சனிக்கிழமை நடந்த இந்த துயர சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தவெக நிர்வாகிகள் மீது, பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில், விஜய்யின் கரூர் பயணம், அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதோடு, தனது கட்சியின் மீதான தார்மீக பொறுப்பையும் அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ