புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாவட்ட வாரியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது பிரச்சாரங்களைத் தாண்டி, அவர் நடத்தும் ரோடு ஷோ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறிக்கொண்டு வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் தொடர்ந்து தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுகவும், மீண்டும் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும் மக்களிடம் பேசி வருகின்றனர். இதற்கிடையில், ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாவட்ட வாரியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது பிரச்சாரங்களைத் தாண்டி, அவர் நடத்தும் ரோடு ஷோ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது...
— TVK Party HQ (@TVKPartyHQ) April 13, 2026
(1/2) pic.twitter.com/2cwhhd1lYW
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து விஜய் தொடர்ந்து மக்களை சந்தித்து பேசி வருகிறார். விஜய் பேசுவதை தாண்டி, அவரை பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். விஜய்யின் வாகனத்தை தொடர்ந்து பின்தொடர்ந்து அவருக்கு கை அசைத்து வருகின்றனர். மேலும் விஜய்யின் பரப்புரை வாகனத்தில் அவர் செய்யும் ரோடு ஷோவிற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பாண்டிச்சேரி தேர்தலுக்கு முன்பு விஜய் அங்கு ரோடு ஷோ நடத்தியிருந்தார். கிட்டத்தட்ட முழு பாண்டிச்சேரியையும் அவர் சுற்றி வந்தார்; அதற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து திருநெல்வேலியில் அவர் செய்த ரோடு ஷோ மிகப் பிரம்மாண்டமாக பேசப்பட்டது. ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியது போல வெளியான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன.
கடந்த வெள்ளிக்கிழமை காரைக்குடிக்கு சென்றிருந்த விஜய், தனது பரப்புரை வாகனத்தில் தொண்டர்களுக்கு கை அசைத்து சென்றார். திடீரென்று வாகனத்திலிருந்து இறங்கிய விஜய், சைக்கிளில் சென்றார். இது யாரும் எதிர்பார்க்காத விதமாக இருந்தது. சிறிது தூரமே விஜய் சைக்கிளில் சென்ற நிலையில், கூட்டம் கூடியதால் அவரால் தொடர்ந்து சைக்கிள் ஓட்ட முடியவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் பரப்புரை வாகனத்தில் ஏறி அனைவருக்கும் கை அசைத்து சென்றார். இந்நிலையில், நேற்று கன்னியாகுமரியில் விஜய் பரப்புரை மற்றும் ரோடு ஷோ சென்றிருந்தார். அப்போது பைபாஸ் சாலையில் மீண்டும் சைக்கிளை எடுத்து ஓட்டி வந்தார். யாருமே எதிர்பார்க்காத வகையில் இது இருந்ததால், ரசிகர்கள் உடனடியாக விஜய்யை பின்தொடர்ந்து ஓடி வர தொடங்கினர். கிட்டத்தட்ட 300 மீட்டருக்கு மேல் விஜய் பைபாஸ் சாலையில் சைக்கிள் ஓட்டியது பெரும் கவனத்தை ஈர்த்தது. அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களிடையே சைக்கிளில் வட்டமடித்தபடியே கை அசைத்து சென்றார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது வாக்களிப்பதற்காகத் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் சென்று வாக்களித்தார் விஜய். அப்போது இருந்து விஜய்க்கும் சைக்கிளுக்கும் இடையேயான பந்தம் அதிகமானது. அதை தொடர்ந்து தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் அவர் சைக்கிளை கையில் எடுத்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் ஓட்டியிருந்த சைக்கிள் Lucifer என்ற கம்பெனியின் சைக்கிளாகும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 11 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மேலும் 15 ஆயிரம் ரூபாய் வரை இந்த மாடல் சைக்கிளின் விலை உள்ளது. விஜய் இந்த மாடல் சைக்கிளை ஓட்டி வந்ததால் பலரும் தற்போது இந்த சைக்கிளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், விஜய் தனது அடுத்தடுத்த பரப்புரைகளிலும் இதே போல சைக்கிளில் சென்று பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரில் பேசிய விஜய் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை அறிமுகம் செய்தார். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய டிஜிட்டல் ஜனநாயக முறையை விஜய் முன் வைத்தார். "மக்கள் அரங்கம்" என்ற திட்டத்தின் மூலம், குடிமக்கள் தங்களது கோரிக்கைகளை ஒரு முறையான டிஜிட்டல் தளம் வழியாக நேரடியாக சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என அறிவித்தார். இணையதளம் மூலம் 10,000 சரிபார்க்கப்பட்ட கையொப்பங்களுடன் ஒரு கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டால், அரசு அதற்கு அதிகாரப்பூர்வமான பதிலை அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும். ஒருவேளை 5 லட்சம் மக்களின் கையொப்பங்கள் கொண்ட மாபெரும் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டால், அது குறித்து தமிழக சட்டமன்றத்தில் கட்டாயமாக விவாதம் நடத்தப்படும். மேலும், ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரின் போதும், பொதுமக்களின் இந்த டிஜிட்டல் மனுக்கள் குறித்து விவாதிக்கவென்றே ஒரு முழு நாள் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க வாக்குறுதியையும் அவர் வழங்கினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ