)
TVK Vijay Swearing In Ceremony Latest News Updates: தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருக்கும் நிலையில், நாளை (மே 9) காலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சராக பதவியேற்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு திமுக கூட்டணியில் இடம்பெற்ற சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, ஆளுநர் மாளிகையில் தவெக தலைவரும், சட்டப்பேரவைக்கு குழுத் தலைவருமான விஜய் இன்று (மே 8) நேரில் சந்தித்தார். அப்போது, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரிடம் அளித்தார்.
இதனால், 3வது முறையாக ஆளுநரை சந்தித்த நிலையில், தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தெரிவித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதை தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் நாளை (மே 9) காலை முதலமைச்சராக பதவியேற்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம், நாளை காலை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு மற்றும் பதவி பிரமாணம் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அமைச்சரவையும் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக முறையே இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு தள்ளி உள்ளது. இந்த சூழலில் தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
விஜய்தான் அடுத்த முதல்வர் என அக்கட்சி தொண்டர்கள் ஆராவாரம் செய்த நிலையில், அதில் சிக்கல் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தன. கடந்த மே 4ஆம் தேதி முதல் நிலவி வந்த நிச்சயமற்ற தன்மை தற்போது விலகி உள்ளது. வரும் மே 10ஆம் தேதிக்குள் ஆட்சியமைக்காவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டுவிடும் என்பதாலும், பாஜகவின் ஆளுகை தமிழ்நாட்டிற்குள் வந்துவிடும் என்பதாலும் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளை காங்கிரஸ் அவசரப்படுத்தியதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் ஆகும். இதில் ஆட்சியமைப்பதற்கு 118 இடங்கள் பெரும்பான்மை தேவை. ஆனால் தவெக 108 இடங்களில் மட்டுமே வென்றது. விஜய் 2 இடங்களில் வென்ற நிலையில், அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, தவெகவுக்கு 11 இடங்கள் தேவைப்பட்டன. இதற்காக கடந்த சில நாட்களாக போராடி வந்த நிலையில், அதற்கு இன்று விடை கிடைத்துள்ளது.
நேற்றைய நேற்று முன்தினம் (மே 6) தமிழக காங்கிரஸ் கமிட்டி தனது ஆதரவு கரத்தை நீட்டியது. இதனால் 5 எம்எல்ஏக்கள் கூடுதலாக கிடைத்தனர். இதன் மூலம் 112 எம்எல்ஏக்களுடன் இருந்த தவெகவிற்கு இன்னும் 6 எம்எல்ஏக்கள் தேவைப்பட்டனர்.
இதற்காக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடனும், விசிக உடனும் தவெக தரப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இருப்பினும் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு தமிழக ஆளுநர் அவரை ஆட்சியமைக்க அழைப்புவிடுக்கவில்லை. அவருக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். இதையடுத்து, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் அளித்த ஆதரவு கடிதங்களின் மூலம், ஆளுநரை மூன்றாவது முறையாக இன்று சந்தித்தார் தவெக தலைவர் விஜய்.