)
தமிழக சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 13-ஆம் தேதி திருச்சியில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கும் த.வெ.க தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ந்து டிசம்பர் மாதம் இறுதி வரை தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த பிரச்சாரத்தில் ஏற்கனவே நடந்த இரண்டு மாநாடுகளிலும் பேசியது போல ஆளுகின்ற திமுக அரசு மற்றும் மத்திய அரசை விமர்சனம் செய்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி காவல் ஆணையர் காமினியை சந்தித்து மனு அளித்திருந்த நிலையில், காவல்துறையின் பலகட்ட ஆய்வுக்கு பிறகு திருச்சி மரக்கடையில் பிரச்சாரம் செய்து கொள்ள திருச்சி மாநகர காவல் துறை அனுமதி அளித்தனர் என தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் த.வெ.க பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்பது தொடர்பாக த.வெ.க வழக்கறிஞர் பிரிவு சென்னை மண்டல பொறுப்பாளர் ஆதித்யசோழன், இமயதமிழன் ஆகியோர் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு திருச்சி மாநகர காவல் வடக்கு காவல்துறை துணை ஆணையர் சிபின் மற்றும் தெற்கு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
23 கட்டுப்பாடுகள்
திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர். குறிப்பாக வாகனம் நிறுத்தும் இடத்தை தேர்வு செய்வது, விஜய் பிரச்சார வாகனத்திற்கு முன்பும், பின்பும் அதிக அளவில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் வரக்கூடாது உள்ளிட்ட 23 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10:30 மணியில் இருந்து 11.00 மணி வரை மட்டுமே அவர் அந்த இடத்தில் பேச முடியும், காலை 9:30 மணி அளவில் மரக்கடை பகுதிக்கு தொண்டர்களை வரவழைத்து வைத்திருக்க வேண்டும், ரோட் ஷோ நடத்தக்கூடாது, விஜய் வரும்பொழுது அவருடைய வாகனத்துக்கு முன்பு பின்பு 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி, வேறு வாகனங்கள் வந்தால் அனுமதி மறுக்கப்படும்.
மருத்துவ வசதி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் தமிழக வெற்றிக்கழகத்தினர் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடாது, பொதுமக்கள் யாருக்கும் போக்குவரத்தில் இடையூறு செய்யக்கூடாது, கூம்பு வடிவ ஸ்பீக்கர்களை வைக்கக்கூடாது த.வெ.க தொண்டர்கள் மிக நீளமான குச்சி கொடி கொண்டு வரக்கூடாது, பள்ளிக்கு செல்பவர்கள் விமான நிலையம் செல்பவர்கள் மருத்துவமனை செல்பவர்களுக்கு வழி விட வேண்டும், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட 23 நிபந்தனைகளை திருச்சி மாநகர காவல் துறையினர் விதித்துள்ளனர்.
திருச்சி மாநகர் காவல்துறை தெரிவித்த 23 நிபந்தனைகள் அனைத்தையும் த.வெ.க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதை அடுத்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. பிரச்சார பயணத்திற்கான காவல்துறையினரின் அனுமதி கடிதம் மாநகர காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து தவெக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ