DMK MP Meeting: தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மார்ச் 9) காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மொத்தம் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை இங்கு வரிசையாக காணலாம்.
DMK MP Meeting: குழப்பும் மத்திய அரசு
தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முதலமைச்சர் சீரிய முயற்சிகளுக்கு துணை நின்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தில், "தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஜனநாயகப் போராளியாகத் திகழ்கின்ற முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலில் இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என உறுதியளிப்பதுடன், தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசு, மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.
மேலும் படிக்க | ரேஷன் கடைகளில் இனி 5 கிலோ கோதுமை கிடையாதா...? அதிர்ச்சி தகவல்!
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பாஜகவின் சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, இப்பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையாகத் துணை நிற்பதுடன் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது.
DMK MP Meeting: மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைக்க...
மறு சீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம் என இரண்டாவது தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில்,"தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்கிறது.
மேலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது.
DMK MP Meeting: நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைப்பது
தொகுதி மறு சீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்படுவோம் என மூன்றாவது தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில்,"நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையின் (பட்ஜெட்) இரண்டாவது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 10ஆம் தேதி (நாளை) தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படைய உள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
DMK MP Meeting: பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் கட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஏப். 4ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல விவகாரங்களை எழுப்ப காத்திருக்கும் நிலையில், திமுகவும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், புதிய தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை போன்ற பிரச்னைகளை எழுப்பும் எனலாம்.
மேலும் படிக்க | இன்றே கடைசி நாள்.. பென்ஷன் வாங்கும் தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









