மதுரையில் திருமாவளவனிடம் தம்பதி செல்பி கேட்ட நிலையில், அவர் தனது நெற்றியில் இருந்த திருநீரை அழித்துவிட்டு செல்பி எடுத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூன் 19) மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் சிக்கந்தர் அவுலியா பாதுஷா பள்ளி வாசலில் அவர் வழிபாடு செய்தார். முன்னதாக மதுரை திருப்பரங்குன்றம் சென்ற திருமாவளவனுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதையடுத்து முருகனை தரிசனம் செய்த நிலையில், அவரின் நெற்றியில் திருநீர் பூசப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இருந்து வெளியே நடந்து வந்த கொண்டிருந்தார். இந்த நிலையில், கோயில் வளாகத்தில் ஒரு தம்பதி திருமாவளவனிடம் செல்பி எடுக்க சொல்லி கேட்டுள்ளார்.
தம்பதியின் செல்போனை வாங்கிய திருமாவளவன் கேமராவில் தனது முகத்தைபார்த்தபடி, நெற்றியில் இருந்த திருநீரை கையால் அழித்துவிட்டு அந்த தம்பதியுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டார். பின்னர் அங்கிருந்து திருமாவளவன் சென்றார். இதனை வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைதளத்தில் பகிர, இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எல். முருகன் கண்டனம்
இதனை பார்த்த பாஜகவை சேர்ந்தவர்கள் திருமாவளவனின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பக்கத்தில், போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானது..! மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வழிபாடு நடத்த சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், நெற்றியில் பூசிய விபூதியை கோவில் வளாகத்திற்குள்ளேயே அழிக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
தொண்டர் ஒருவர் செல்பி எடுப்பதற்காக விபூதியை அழித்ததாக விளக்கம் சொல்கின்றனர். முருகப்பெருமானின் அருட் பிரசாதமான விபூதி, இவர்களுக்கு அழகை குறைக்கும் பொருளாகத் தெரிகிறது. இதுபோன்ற போலி கபடதாரிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி அபகரிக்கும் கும்பலுக்கு எதிராக இந்துக்கள் போராடி வருகின்றனர். ஆனால் இவர்களோ, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்கின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவினரும் அவர்களின் கூட்டணி கட்சியான விசிக-வும் செய்து வருவது மோசடி அரசியல். இந்துக்களின் எழுச்சியைப் பார்த்து பயந்து போன இவர்கள், தற்போது இந்து மத நம்பிக்கையில் ஆர்வமுள்ளவர்களாக காட்டிக்கொள்ள முயல்கின்றனர். இந்த கபட நாடகத்திற்காகத் தான் திருமாவளவன் அவர்களும் திருப்பரங்குன்றம் சென்றுள்ளார்.
அரிதாரம் பூசி நடிப்பதைப் போன்று கோவிலுக்கு சென்று விபூதி பூசிக் கொண்டு, அதை கோவில் வளகாத்திலேயே அழித்துள்ளார். இவர்களுக்கு தமிழக மக்கள் மட்டுமல்லாமல் அருள்மிகு சுப்ரமணிய சுவாமியும் பாடம் புகட்டுவார். வெற்றிவேல்..! வீரவேல்..! என தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ