)
தமிழ்நாடு அரசியல் இதுவரை கண்டிராத ஒரு புதிய சிக்கலை சந்தித்து இருக்கிறது. நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி இப்படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என யாரும் நினைக்கவில்லை. அந்த கட்சி 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. இருப்பினும் அவர்களால் இன்னும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நீடித்து வருகிறது. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
விஜய் இதுவரை இரண்டு முறை ஆளுநரை சந்தித்தும் அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதற்கு அவர் செய்த மிகப்பெரிய நிர்வாகத் தவறே காரணம் என கூறப்படுகிறது. அதாவது, ஆளுநர் அர்லேகரின் பிடிவாதம் தவெகவை நீதிமன்றம் செல்ல தூண்டியிருக்கிறது. ஆனாலும் தவெகவால் ஆட்சி அமைக்க முடியாது என கூறப்படுகிறது. நீதிமன்றம் விஜய்க்கு சாதகமான தீர்ப்பு வழங்க வாய்ப்பு குறைவு என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக நின்ற போது சற்று அமைதியாக இருந்திருக்கலாம். ஆளுநரின் அழைப்பு வரும் வரை காத்திருந்து பின்னர் சட்டசபையில் நிரூபித்து இருக்கலாம் அல்லது தவெக தான் பெரிய கட்சி என்று சொல்லி இருக்கலாம். ஆனால் ஆளுநர் மாளிகைக்கு சென்று அவர் கொடுத்த கடிதம் தான் தற்போது அவருக்கு எதிர்வினையை கொடுத்திருக்கிறது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அவர்களிடம் கொடுத்த கடிதத்தில் தன்னிடம் இருக்கும் 107 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள் சேர்த்து 112 என கணக்கு காட்டியது மிகப்பெரிய தவறாக மாறியிருக்கிறது. அது அவரது பலவீனத்தை ஒப்பு கொண்டதாக ஆகிவிட்டது. ”உங்களிடம் 118 பேர் இல்லையே அப்புறம் எப்படி உங்களை ஆட்சி அமைக்க அழைக்க முடியும்” என ஆளுநர் கேட்ட கேள்விக்கு விஜய் இடம் பதில் இல்லை. ஒருவேளை விஜய் ஆதரவு கடிதமே கொடுக்காமல் இருந்திருந்தால் ஆளுநர் அவரை தனிப்பெரும் கட்சி தலைவராக பார்த்திருப்பார். ஆனால் விஜய் தானாகவே முன்வந்து கூட்டணி கணக்கு காட்டியதால் ஏன் 118 வரவில்லை என்ற கேள்வியை ஆளுநர் எழுப்ப வழிவகை செய்தது. பெரும்பான்மைக்கு குறைவான எம்எல்ஏக்களை வைத்திருக்கும் ஒருவரை எப்படி ஆட்சி அமைக்க அழைப்பது என ஆளுநர் தரப்பு பிடிவாதம் காட்டுகிறது.
இந்த நிலையில் தான் எஸ்.ஆர். பொம்மை வழக்கை வைத்து நீதிமன்றம் செல்லலாம் என விஜய் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால், இதுவும் பெரிய அளவு உதவாது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதாவது, அரசியல் சாசனத்தின் 356 வது பிரிவை பயன்படுத்துவது குறித்து பேசும் புகழ் பெற்ற எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பு ஒரு அரசியல் பெரும்பான்மையை ஆளுநர் மாளிகை தீர்மானிக்க கூடாது. சட்டசபையில் தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறது. இதை வைத்து தான் விஜய் நீதிமன்றம் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் இதில் பெரிய சிக்கல் உள்ளது. எஸ் ஆர் பொம்மை வழக்கின் சாராம்சம், ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் ஒரு முதலமைச்சரின் பெரும்பான்மையை பற்றியது அல்லது தனிப்பெரும் கட்சி பற்றியது. ஆனால் புதிய அரசு அமையாத நிலையில், ஒருவரை ஆட்சி பெரும்பான்மை இல்லை என்பது ஆளுநருக்கு ஆவணப்பூர்வமாக தெரிந்து விட்டால் ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அழைக்க மறுக்கலாம்.
விஜய் நீதிமன்றம் செல்லும் பட்சத்தில், ”நான் தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்னை ஏன் ஆளுநர் பதவி ஏற்க அழைக்கவில்லை” என கேட்கலாம். ஆனால் ஆளுநர் திரப்பு ”விஜயியின் 112 பேர் ஆதரவு கடிதத்தை காட்டி மனுதார் தனக்கு 118 பேர் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு உள்ளார். நிலையற்ற ஒரு அரசை அமைக்க குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்” என்று வாதிடுவார். அதனால் இதை காட்டிய கணக்கின்படி அவரிடம் மெஜாரிட்டி இல்லை என்பது உறுதிப்படுத்துவதால் ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பாதது என தெரிகிறது.
தற்போது விஜய்க்கு இருக்கும் ஒரே வழி விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். ஆவர்களிடம் ஆறு எம்எல்ஏக்கள் உள்ளனர். இதை வைத்து ஒரு புதிய கடிதத்தை மீண்டும் ஆளுநரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க வழியை ஏற்படுத்த வேண்டும்.
விஜய் ஆளுநருக்கு கொடுத்த கடிதத்தில் செய்த ஒரு தவறு தற்போது அவர் ஆட்சி அமைப்பதிலேயே பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அதில் பின்னடைவையே சந்திப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மீதமுள்ள 6 எம்எல்ஏக்களை எப்படி பெறுவார்? அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் எந்த மாதிரியாக இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.