)
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்போது செயல்படாத வங்கிக் கணக்கைக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். இத்திட்டத்தில் ஒருவேளை நீங்கள் வழங்கிய வங்கிக் கணக்கு செயலில் இல்லையென்றால், அந்த விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படுமோ என்றும் சில வருத்தத்துடன் உள்ளனர். ஆனால், நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தச் சிக்கலைத் தீர்க்க அரசு சில வழிமுறைகளை வழங்கியுள்ளது.
நீங்கள் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, HDFC போன்ற தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருந்து, விண்ணப்பத்தில் அதை குறிப்பிட்டிருந்தால், அந்த வங்கிக் கணக்கிற்கும் உரிமைத்தொகை அனுப்பப்படும். முக்கியமாக, நீங்கள் பயன்படுத்தும் வங்கிக் கணக்குடன் உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் திட்டத்திற்கு தகுதியானவராக இருக்கும் பட்சத்தில், ரூ.1,000 உங்கள் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
ஒருவேளை, நீங்கள் விண்ணப்பத்தில் அளித்த வங்கிக் கணக்கு செயலில் இல்லாத (Inactive) கணக்காக இருந்தால், நீங்கள் உடனடியாக உங்கள் வங்கிக் கிளைக்கு நேரில் சென்று அந்தக் கணக்கினை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்ய முடியாதபட்சத்தில், புதிய வங்கிக் கணக்கைத் தொடங்கி அதற்கான தகவல்களைச் தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், உங்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அக்கவுண்டில் பழைய வங்கி கணக்குக்கு மாற்றாக புதிய வங்கி கணக்கு சேர்த்துக் கொள்ளப்படும்.
செய்ய வேண்டியது என்ன?
வங்கிக் கணக்கினை செயல்படுத்துதல்: உங்கள் வங்கிக் கணக்கு நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது செயலிழந்திருக்கலாம். அதை மீண்டும் செயல்படுத்துவதற்கான படிவத்தை வங்கியில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதற்கு, உங்கள் அடையாளம் மற்றும் முகவரிச் சான்றுகள் தேவைப்படும்.
புதிய வங்கிக் கணக்கைச் சேர்த்தல்: நீங்கள் வேறு ஒரு வங்கிக் கணக்கை மகளிர் உரிமைத் தொகை திட்டத்துடன் இணைக்க விரும்பினால், உங்கள் தாலுகா அலுவலகத்திற்குச் சென்று மனு அளித்து மாற்றிக் கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: திட்டம் குறித்த முக்கியத் தகவல்கள்
இந்தத் திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி வழங்குவதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவும், குடும்பத்தில் பொருளாதார ரீதியாக பங்களிக்கவும் முடியும். இத்திட்டம் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 2023 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டது.
யார் விண்ணப்பிக்கலாம்?
- தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்பத் தலைவி.
- 21 வயது பூர்த்தியானவர்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்க வேண்டும்.
- ஆண்டுக்கு 3,600 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
யார் விண்ணப்பிக்கக்கூடாது?
- அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள்.
- வருமான வரி செலுத்துவோர்.
- வணிக ரீதியான வாகனங்கள் வைத்திருப்பவர்கள்.
- ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இந்தத் தொகையைப் பெற முடியாது.
விண்ணப்பிக்கும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்
* தவறான தகவல்கள்: விண்ணப்பத்தில் உங்கள் பெயர், முகவரி அல்லது வருமானம் பற்றிய தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம்.
* போலி ஆவணங்கள்: போலியான ஆதார் அல்லது வேறு எந்த ஆவணத்தையும் பயன்படுத்தக் கூடாது.
* செயல்படாத கணக்கு: செயலில் இல்லாத வங்கிக் கணக்கைக் கொடுத்து விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும். அப்படி கொடுத்திருந்தால், உடனடியாக அதைச் செயல்படுத்துவது அவசியம்.
* அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யாமை: விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் முழுமையாகவும் தெளிவாகவும் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, மகளிர் உரிமைத் தொகையை நீங்கள் சிரமமின்றி பெற முடியும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள அரசு அலுவலகங்களை அணுகி தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் அரசு நடத்தும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ