Tamil Nadu Budget 2025 Latest News: தமிழக அரசின் சார்பில் 2025 26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த பட்ஜெட் தாக்கலில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்பதைக் குறித்து பார்ப்போம்.
தற்போது 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டில் நடைபோட்டு வருகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் உள்ளதால், பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் மார்ச் 14 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் இதனை ஒட்டுமொத்த தமிழக மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கடந்த 2024-25 ஆம் ஆண்டு மொத்தம் ரூ.4,12,000 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 9,4060 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கல்வித்துறைக்கு மட்டும் 52,000 கோடி ரூபாயும், நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 41,000 கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சித் துறைக்கு 27,000 கோடி ரூபாயும், எரிசக்தித் துறைக்கு 21,000 கோடி ரூபாயும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 20,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், வடசென்னை வளர்ச்சித் திட்டம், கலைஞர் கனவு இல்லத் திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமை பெண் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.
இவற்றில் மகளிர் உரிமை திட்டத்திற்கு கடந்த நிதியாண்டில் 13,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மேலும் உயர்த்தப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது. இதுபோல மகளிருக்கு இன்ப அதிர்ச்சி தரும் பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகையை ரூ.1000 ரூபாயில் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தி அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
எனவே தமிழக பட்ஜெட்டிலும் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம்தோறும் வழங்கப்படும் 1000 ரூபாய் என்பது ரூ1500 முதல் ரூ.2000 வரை உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு தர வேண்டிய நிதியை இன்னும் தராமல் உள்ளது. புதிய கல்விக் கொள்கை திட்டத்தை ஏற்காததால் 2000 கோடி ரூபாய் நிறுத்தப்பட்டதாக திமுக அரசு குற்றம் சாட்டியது. இதன் காரணமாக கல்வித்துறைக்கு இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
அதேபோல பேரிடர் நிவாரண பணிகளையும் தமிழ்நாடு அரசே சொந்த நிதியில் இருந்து செய்து வருகிறது. எனவே இயற்கை பேரிடர் நிகழ்வுகளுக்கு முன்னெச்சரிக்கையாக அதிக நிதி ஒதுக்க வேண்டியதாய் உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு தேர்தலும் வரவுள்ளதால் தற்போதைய ஆட்சிக்காலத்தில் இது கடைசி முழு பட்ஜெட் ஆகும். எனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்போகும் சலுகைகளை அடுத்து ஆட்சி அமைப்பதை அனுமானிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும்.
இத்தனை சவால்களையும் மீறி மார்ச் 14 ஆம் தேதி அன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்படப்போகும் இந்த பட்ஜெட்டை தமிழக மக்கள் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் கவனித்து வருகின்றனர்.
மேலும் படிக்க - TN Budget 2025 | மார்ச் 14.. தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல்.. வரப்போகும் மாற்றங்கள்
மேலும் படிக்க - தமிழ்நாடு பட்ஜெட் 2025: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் கிடைக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









