Edappadi Palanisamy Press Meet: சேலம் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக, விசிக உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் அந்தந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு கட்சியில் புதிதாக இணைந்துவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.
Edappadi Palanisamy: அமித்ஷாவை சந்தித்தது ஏன்?
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "கடந்த செப். 16ஆம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கப் போவதாக ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்துவிட்டு உள்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். குறிப்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. என்னிடம் மக்கள் சந்திப்பு குறித்து விசாரித்தார், மக்கள் நல்ல ஆதரவு கொடுப்பதாக பெருமிதத்துடன் அவர் தெரிவித்தார்.
Edappadi Palanisamy: முகத்தை மூடிச் சென்றேனா...?
இந்த நிலையில் உள்துறை அமைச்சரை சந்தித்து விட்டு வெளியே வரும்போது என்னுடைய முகத்தை துடைத்துக் கொண்டு காரில் சென்றேன். ஆனால் சில ஊடகங்கள் திட்டமிட்டு தான் முகத்தை மூடி செல்வதாக பொய் செய்தி பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது, வருத்தமளிக்கிறது.
ஜனநாயகத்தின் மிகப்பெரிய தூணாக விளங்கும் ஊடகங்கள் இதுபோன்று செயல்பட்டது ஏன்?. திட்டமிட்டு குறிப்பிட்ட ஊடகங்கள் இந்த செய்தியை பரப்பி வருகிறது. அதே நிலையில் உள்துறை அமைச்சர் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நான் ஒருபோதும் தலையிட மாட்டேன் என ஏற்கனவே அறிவித்துள்ளார். தற்போதும் அதை தெரிவித்தார். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை. இதுபோன்ற கேள்விகளை இனி செய்தியாளர்கள் தன்னிடம் கேட்கக் கூடாது" என உறுதிபட தெரிவித்தார்.
Edappadi Palanisamy: தனியார் காரில் சென்றது ஏன்?
அமித்ஷாவை சந்திக்க சென்றபோது அரசு காரிலும், அவரை சந்தித்துவிட்டு திரும்பும்போது தனியார் காரில் தொழிலதிபரோடு திரும்பியதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, "தொழிலதிபர் என்று அங்கு யாருமில்லை, நீங்கள் யூகிக்கக் கூடாது. அமித்ஷா வேறு மீட்டிங்கில் இருந்ததால் என்னுடன் வந்த நிர்வாகிகள் சாப்பிட வேண்டும் என்பதால் அவர்களை முன்னரே அனுப்பிவிட்டேன். பின்னர், மீட்டிங் முடிந்து வந்த பின் என்னை அழைப்பார் என கூறப்பட்டதால், நேரம் எவ்வளவு ஆகும் என்பது தெரியாது என்பதால் அவர்களை அனுப்பிவிட்டு, நான் அவரை சந்தித்தேன். கார் இல்லாததால் கிடைத்த காரில் தான் திரும்பிச் சென்றேன். தன்னிடம் பெரிய காரோ, பகட்டான ஆடையோ கிடையாது" என்றார்.
Edappadi Palanisamy: செங்கோட்டையன் மீது அடுத்த நடவடிக்கை?
மேலும் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவின் விதிமுறைகளை மீறும் வகையில் செயல்படுவர்களை கட்சியில் இருந்து நீக்குவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கம். அதன் அடிப்படையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும்" என செங்கோட்டையன் மீதான நடவடிக்கை குறித்து அவர் சூசகமாக தெரிவித்தார்.
Edappadi Palanisamy: டிடிவி தினகரனுக்கு பதில்
அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் விமர்சனம் குறித்து பேசிய இபிஎஸ், "கடந்த சில நாட்களாக என்னை டிடிவி தினகரன் விமர்சனம் செய்து வருகிறார். என்ன உள்நோக்கம் என்பது புரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர். பிரிந்து சென்றவர்களை ஒருபோதும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை. அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக தெரிவித்தால் அது அவர்கள் விருப்பம்" என்றார்.
Edappadi Palanisamy: ஸ்டாலின் மீது தாக்கு
தொடர்ந்து ஸ்டாலின் குறித்து பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது என்னையும் என்னுடைய ஆட்சியும் அப்போதைய மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது தமிழத்திற்கு வந்த பிரதமருக்கு கருப்பு பலூன் காட்டிய ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் தற்போது சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறார், வெள்ளைக்கொடி காட்டுகிறார்" என்றார்.
Edappadi Palanisamy: நீட் தேர்வு விவகாரம்
மஞ்சள், பச்சை பஸ் குறித்து உதயநிதி தெரிவித்த கருத்து பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, "பஸ்ஸில் சென்றால்தான் எல்லாம் நடக்கும் என்று அவர் இப்போதாவது புரிந்திருக்கிறது" என்றார். மேலும், மத்திய அரசு தான் அதிமுக ஆட்சியை காப்பாற்றியதாக பேசியது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தான் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ஒரு மாதம் 3 மாதம், 6 மாதத்திற்குள் ஆட்சியை வீழ்த்த ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டனர். விமர்சனம் செய்தனர். அந்த சமயத்தில் மத்திய அரசுதான் காப்பாற்றியது" என வெளிப்படையாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, "தமிழகத்தில் கிட்னி திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் அதற்கு காரணமான திமுக சட்டமன்ற உறுப்பினர் இந்த விஷயத்தில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாக ஆய்வில் தெரியவந்தது. இதற்காக ஆய்வு குழுவும் நியமித்து அந்த குழுவும் நடந்த சம்பவத்தை உறுதி செய்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. நீட் தேர்வு விஷயத்தில் திமுக நாடகமாடியது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரியவந்துள்ளது. மக்களை இது ஏமாற்றும் செயல், நீட் தேர்வின் ரகசியத்தை இப்போதாவது உதயநிதி உணர்ந்து இருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | 'காலில் விழுந்த பின் கர்ச்சீப் எதுக்கு... பாஜகவுக்கு No Entry' ஸ்டாலின் தடலாடி பேச்சு
மேலும் படிக்க | இனி EPS 'முகமூடி பழனிச்சாமி' என அழைக்கப்படுவார் - வறுத்தெடுத்த டிடிவி தினகரன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









