Sasikandh Senthil, Annamalai : எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மாணவர்கள் மத்திய அரசு தேர்வுகளில் தோற்பது ஏன்? என்ற முக்கிய கேள்வியை சசிகாந்த் செந்தில் எழுப்பியுள்ளார். அவர்களுக்கு இடையே இடையே நடைபெற்ற கருத்து மோதல் பதிவுகள் இங்கே....
சசிகாந்த் செந்தில் பதிவு
ஹிந்தி மொழி தெரியாததால் தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறாததற்கு காரணம் என்று தமிழ்நாட்டு பா.ஜ.க மாநில தலைவர் திரு. அண்ணாமலை கூறியுள்ளார். உண்மையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து பாட திட்டத்தில், கல்வி முறையில் மாற்றம் செய்து 2014 ற்கு முன்பு 10.6 சதவித தேர்ச்சியாக இருந்ததை இன்று 4.4 சதவீதமாக குறைத்து கிராம புற மாணவர்கள் UPSC தேர்வை பற்றி யோசிக்க கூட முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது தான் காரணம்.
அண்ணாமலை விளக்கம்
தமிழக முதலமைச்சர் தொடங்கி, திமுக மற்றும் ஒட்டு மொத்த இந்தி கூட்டணிக் கட்சி எம்பிக்கள் அனைவருமே பொய் சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஹிந்தி மொழி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை என்று நான் கூறியதாக திரு. சசிகாந்த் செந்தில் அவர்கள் பொய் கூறியிருக்கிறார். அரசு உயர் பதவி வகித்த ஒருவர், அரசியலுக்காக இப்படி இணைய திமுக கைக்கூலிகள் போல் போலிச் செய்திகளைப் பரப்பும் அளவுக்குத் தரம் இறங்கியிருப்பது வருத்தமளிக்கிறது. நான் பேசிய காணொளியை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
தமிழகத்தில் இருந்து கிராமப்புற மாணவர்கள் UPSC தேர்வில் தேர்ச்சி பெறும் சதவீதம் குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். அதற்குக் காரணம், திமுக காங்கிரஸ் கூட்டணி, தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளை முன்னிறுத்தி, அரசுப் பள்ளிகளைச் செயலிழக்கச் செய்திருப்பதுதானே தவிர, மத்திய அரசு காரணமல்ல. கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி குறைந்திருப்பதை ஒப்புக்கொள்ளும் திரு. சசிகாந்த் செந்தில் அவர்கள், தமிழக அரசுப் பாடத்திட்டம், தனியார் பள்ளிகள் பாடத்திட்டத்தைப் போல தரமானவை இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறாரா?, தேசியக் கல்விக் கொள்கை மூலம் தரமான கல்வி தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைப்பதை, அவர் இனியாவது ஆதரிப்பார் என்று நம்புகிறோம்.
சசிகாந்த் செந்தில் விளக்கமும் கேள்வியும்..
நீங்கள் மும்மொழிக் கொள்கை பற்றி பேசும் போது, உங்களிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி – தமிழ்நாட்டின் இருமொழிக் கல்வி முறை கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழகம் பல வடமாநிலங்களை விட கல்வியில் முன்னிலையில் இருக்கும்போது, தோல்வியடைந்த கல்விமுறைகளை நம்மீது கட்டாயமாகத் திணிப்பதன் நோக்கம் என்ன?
நீங்கள் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதை விட்டு விட்டு, UPSC தேர்வை இழுத்துக்கொண்டு வந்தது நீங்கள். மும்மொழிக் கொள்கை என்பது வடமாநிலங்களை முன்னேற்றம் அடைய செய்யும் திட்டம் அல்ல. அது மொழித் திணிப்பு, அதன் வழியே கலாச்சார ஒழிப்பு என்ற பயங்கர செயல்திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. இப்போது UPSC தேர்வைப் பற்றி பேசலாம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழக கல்விக் கொள்கையில் எந்த முக்கியமான மாற்றங்களும் இல்லை. ஆனால், தமிழக மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறும் எண்ணிக்கை ஏன் மோசமாகக் குறைந்தது? இதற்கு பதில் ஒரே ஒன்று – மோடியின் அரசு தமிழகத்தையும் மற்ற பிற இந்தி பேச மாநிலங்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தேர்வுகளை வடமாநிலங்களின் வசதிக்கேற்ப மாற்றிவிட்டது.
2011-ல் UPA அரசு CSAT முறையை அறிமுகப் படுத்திய பொழுது கட்டாய தகுதி தேர்ச்சி இல்லாதப்போது 2015ல் மோடி அரசு CSAT தேர்வை கொடிய தகுதிச் சோதனைப் தேர்வாக மாற்றியதே ஒரு பெரிய மோசடி! இதனால் என்ன நடந்தது?. •இந்த CSAT-ல் முக்கியமான புரிதல் (Comprehension) பகுதி ஹிந்தி மாணவர்களுக்கு ஹிந்தியில் இருக்கிறது, ஆனால் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் போன்றவர்கள் அதை ஆங்கிலத்தில் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இது நியாயமா?
CSAT ஏன் CAT (Common Admission Test) போல மிகப்பெரிய ரீதியில் கடினமாக மாற்றப்பட்டது? இது IAS தேர்வா, M.B.A. தேர்வா?. இதுவரை முக்கியமாக அரசியலமைப்பு, வரலாறு, சமூகநீதி போன்றவற்றில் சிறந்த தமிழகம் மற்றும் பிற மாநில மாணவர்கள், இந்த CSAT சிக்கலில் சிக்கி, தேர்வில் தோல்வியடைய வைக்கப்பட்டார்கள். General Studies-ல் Cutoff 105 இருக்கும்போது, அதில் 130+ மதிப்பெண் வாங்கிய மாணவர்களும், CSAT பாஸ் செய்ய முடியாமல் வெளியே தள்ளப்பட்டார்கள். இந்த தேர்வு ஒரு அறிவு முறைமையைச் சோதிப்பதற்கானதா, இந்தி பேசாத மாணவர்களை போட்டியிலிருந்து நீக்குவதற்கானதா?
இந்தியாவில் இருப்பது ஒரு மாநிலம், ஒரு இந்தி மொழி மட்டுமல்ல! தமிழகம் மட்டுமல்ல, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பெங்கால், மகாராஷ்டிரா – எல்லா மாநிலங்களும் இதே விவகாரத்தில் மத்திய அரசால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், அண்ணாமலை, நீங்கள் முதலில் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:
- ஏன் ஒன்றிய பாஜக அரசு CSAT தேர்வு முறையில் மொழி மற்றும் சிக்கலான aptitude-based hurdle-களை உருவாக்கி, வடமாநில மாணவர்களுக்கு மட்டுமே பயன் தரும் மாதிரி மாற்றம் செய்தது?
- ஏன் UPSC தேர்வில் மற்ற மாநில மாணவர்களை புறக்கணித்து, ஒரு மையத்துவ அரசுத் தேர்வு முறையை நடத்தியது?
- ஏன் UPSC தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை வெகு அளவில் குறைந்தது?
இதைப் பற்றிப் பேச முடியாமல், சமூக வலைதளத்தில் உங்கள் அடியாட்களை தனி நபர் தாக்குதலுக்கு அனுப்பாமல், நேரடியாக பதில் தரவும். தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு அரசியலை விளையாட்டாக நினைப்பது உங்களின் தவறு. தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்தாலும் தமிழர்களுக்கெதிராக செயல்படும் எந்த அரசியலுக்கும் எதிராகவே அந்த அரசு இருக்கும். இந்தியில் எழுதினால் வெற்றி, தமிழில் எழுதினால் தோல்வி – இதை நியாயம் என்றா சொல்கிறீர்கள்? இடஒதுக்கீட்டில் படித்து, IPS தேர்வு பெற்று, அந்த இடஒதுக்கீட்டையே எதிர்க்கும் நீங்கள் இதை நியாயப்படுத்துவதில் வியப்பில்லை!
மோடியின் அடிமையாக இருந்தால், தமிழர்களுக்கு நியாயம் கிடைக்குமா? உங்களின் அரசியலையும் உங்களின் தலைவரையும் காப்பாற்ற மட்டும் பேசாமல், உண்மையைப் புரிந்து, நேரடியாக பதில் சொல்லுங்கள். தமிழர்கள் உங்களின் ஒவ்வொரு தவறான முடிவையும் நினைவில் வைத்திருக்கிறார்கள் – இந்த UPSC விவகாரமும் அதில் ஒன்று. தமிழ்நாட்டில், தமிழனாய் பிறந்து இருந்தாலும், தமிழருக்கெதிராக RSSன் கைக்கூலியாய் இருந்து கொண்டு, மோடி அவர்களை சந்தோஷப்படுத்தும் ஒரே நோக்கில் தமிழர் நலனுக்கு எதிராக செயற்படும் பண்ணையார் மனநிலையில் இருக்கும் அண்ணாமலை அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - இது BJP-RSS தமிழர் மேல் நடத்தும் ஒரு திட்டமிட்ட மொழி, இன மற்றும் கல்வி அடக்குமுறை. அண்ணாமலை அவர்களே, தமிழர் விரோதி பாஜகவை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்!
மேலும் படிக்க | இன்றே கடைசி நாள்.. பென்ஷன் வாங்கும் தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









