)
Aadhaar : நீங்கள் சமீபத்தில் புதிய இடத்திற்கு மாறிவிட்டீர்களா? அப்படி என்றால், நீங்கள் நிச்சயம் உங்களிடம் இருக்கும் ஆவணங்களிலும் முகவரியை மாற்ற வேண்டும். அப்படி, நீங்கள் உங்களின் ஆவணங்களில் முகவரியை மாற்றும்போது உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை மாற்ற மறந்துவிடாதீர்கள். ஆதார் முகவரியை புதுப்பித்து வைத்திருப்பது, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட சேவைகளைத் தடையின்றிப் பயன்படுத்த உதவும். மேலும், ஆதார் ஆணையம் (UIDAI) அடையாளத் திருட்டு போன்ற தவறான பயன்பாடுகளைத் தடுக்கவும் இது உதவுகிறது.
தற்போது, ஆதார் அட்டையை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தச் சேவையை UIDAI நீட்டித்துள்ளது. உங்கள் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை டிசம்பர் 14, 2024 வரை எந்தக் கட்டணமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதற்கான காலவகாசம் வழங்கப்பட்டு இப்போது நீங்கள் ஆன்லைனிலேயே இலவசமாக ஆதார் முகவரியை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இந்த இலவச சேவை முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களுக்கு மட்டுமே பொருந்தும். உங்கள் கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்கள் போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் (biometric) புதுப்பிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். அதற்கான கட்டணமும் உண்டு.
நீங்கள் சமீபத்தில் இடம் மாறியிருந்தால் அல்லது உங்கள் ஆதார் விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால், அதை ஆன்லைனில் எவ்வாறு புதுப்பிப்பது என்பதற்கான எளிய வழிமுறைகள் இங்கே தெரிந்து க்கொள்ளுங்கள்
* மத்திய அரசின் ஆதார் சுய சேவை போர்ட்டலான myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
* உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லைப் (OTP) பயன்படுத்தி உள்நுழையவும்.
* உள்நுழைந்த பிறகு, உங்கள் ஆதார் விவரங்களைச் சரிபார்க்கவும். உங்கள் முகவரி அப்டேட் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* முகவரிச் சான்றுக்கான (Proof of Address - PoA) ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை (JPEG, PNG, அல்லது PDF வடிவத்தில், அதிகபட்சம் 2 MB அளவு) பதிவேற்றவும்.
* ஆவணத்தைப் பதிவேற்றிய பிறகு, உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். அதன் பிறகு, உங்கள் கோரிக்கையின் நிலையைத் தெரிந்துகொள்ள ஒரு சேவை கோரிக்கை எண் (SRN) உங்களுக்கு வழங்கப்படும்.
* உங்கள் கோரிக்கை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை அறிய, உங்கள் SRN எண்ணை அவ்வப்போது சரிபார்க்கவும்.
UIDAI இந்தியக் குடிமக்கள் தங்கள் ஆதார் விவரங்களை அடிக்கடி புதுப்பிக்க அறிவுறுத்துகிறது. குறிப்பாக, சிறு வயதில் ஆதார் எடுத்த குழந்தைகள், 15 வயதை அடைந்த பிறகு தங்கள் உயிரியல் தகவல்களைப் புதுப்பிப்பது மிக அவசியம். விபத்து அல்லது உடல்நலப் பிரச்சனைகளால் உயிரியல் தகவல்கள் மாறியவர்களும் புதுப்பிக்க வேண்டும்.
ஆதார் விவரங்களை புதுப்பிக்காததால் ஏற்படும் சிக்கல்கள்
* பழைய முகவரி அல்லது தவறான தகவல்கள், நிதி பரிவர்த்தனைகள், விமான நிலையங்களில் அல்லது அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
* தவறான தகவல்கள், ஆதார் அங்கீகாரத்தில் தோல்விகளை ஏற்படுத்தலாம்.
* ஆதாரை தொடர்ந்து புதுப்பிப்பது, அரசின் தகவல் தளத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ