WhatsApp Privacy Lawsuit News: வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் செய்திகளை ரகசியமாக இடைமறித்து, அக்சென்ச்சர் போன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை 'மிகப்பெரிய மோசடி' என எலான் மஸ்க் மற்றும் பாவெல் துரோவ் விமர்சித்துள்ளனர்.

WhatsApp Encryption Controversy Tamil: நமது வாழ்க்கையில் சுவாசிப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு வாட்ஸ்அப் (WhatsApp) தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அலுவலகக் குழுக்கள், நண்பர்கள் குழுக்கள், மனைவி, காதலி அல்லது நண்பர்களுடனான தனிப்பட்ட உரையாடல்கள் என அனைத்தும் வாட்ஸ்அப்பில்தான் நடக்கின்றன. புகைப்படங்கள், முக்கியத் தகவல்கள், ஏன் சிஏ-விடம் (CA) பகிரப்படும் வங்கி அறிக்கைகள் கூட இதில் அடங்கும். உங்கள் தனிப்பட்ட செய்திகளை வாட்ஸ்அப் படிக்கிறது என்று தெரிந்தால், உங்களுக்கு எவ்வளவு கவலை ஏற்படும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் பிரையன் ஒய் ஷார்ஜி மற்றும் நிதா சாம்சன் ஆகிய இரு பயனர்கள் வாட்ஸ்அப் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். மெட்டா நிறுவனம் தனது லாபத்திற்காக பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அக்சென்ச்சர் (Accenture) போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதாவது வாட்ஸ்அப் கூறும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (End-to-End Encryption) என்பது ஒரு ஏமாற்று வேலை. மெட்டா நிறுவனம் ரகசியமாகச் செய்திகளை இடைமறித்து படிக்கிறது எனக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த சர்ச்சை அமெரிக்காவில் வாட்ஸ்அப் மீது தொடரப்பட்ட ஒரு புதிய 'கிளாஸ் ஆக்ஷன்' (Class Action) வழக்கினால் தொடங்கியது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரையன் ஒய் ஷார்ஜி மற்றும் நிதா சாம்சன் என்ற இரண்டு பயனர்கள் கலிபோர்னியா ஃபெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்தனர். இதில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றின் தாய் நிறுவனம்) மற்றும் அக்சென்ச்சர் (Accenture) ஆகிய நிறுவனங்கள் தரப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளன. மனுதாரர்கள் ஜூரி விசாரணை மற்றும் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கோரியுள்ளனர்.
வாட்ஸ்அப் எப்போதும் வலியுறுத்தும் ஒரு விஷயம்எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்டட் ( End-to-End Encryption). இதன் அர்த்தம் "செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் மட்டுமே படிக்க முடியும். இடையில் இருக்கும் இணையச் சேவை வழங்கிகள் (ISP) அல்லது வாட்ஸ்அப் நிறுவனமே நினைத்தாலும் செய்திகளைப் பார்க்க முடியாது" என்பதாகும்.
ஆனால் அந்த மனுவில், வாட்ஸ்அப் தனது பயனர்களின் செய்திகளை இடையில் இடைமறிப்பதாகவும் (Intercept), மெட்டா இந்தச் செய்திகளை அக்சென்ச்சர் போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி வெளியானதும், ஈலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், "வாட்ஸ்அப்பை நம்ப முடியாது" என்று பதிவிட்டார். வாட்ஸ்அப்பின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் ஒரு முழுமையான பொய் என்றும், மெட்டா நிறுவனம் ரகசியமாகத் தனது ஊழியர்கள் மற்றும் அக்சென்ச்சர் போன்ற ஒப்பந்ததாரர்களை உங்கள் செய்திகளைப் படிக்கவும், சேமிக்கவும் அனுமதிக்கிறது என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் கூறுகையில், "வாட்ஸ்அப்பின் என்க்ரிப்ஷன் மிகப்பெரிய தனியுரிமை மோசடியாக இருக்கலாம். மில்லியன் கணக்கான பயனர்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். டெலிகிராம் இது போன்ற செயல்களை ஒருபோதும் செய்ததில்லை, செய்யப்போவதும் இல்லை" என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை வாட்ஸ்அப் முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்த வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என்றும், வாட்ஸ்அப் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக 'சிக்னல் புரோட்டோகால்' (Signal Protocol) மூலம் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையைப் பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளது. எனவே அனுப்புநர் மற்றும் பெறுநரைத் தவிர வேறு யாராலும் செய்திகளைப் படிக்க முடியாது என்று நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இடையிலான மோதல் பழையது. ஜுக்கர்பெர்க் எக்ஸிற்குப் போட்டியாக 'த்ரெட்ஸ்' (Threads) அறிமுகப்படுத்தினார். மஸ்க் தனது ஏஐ சாட்போட் 'க்ரோக்' (Grok), மெட்டா ஏஐ-ஐ விடச் சிறந்தது என்று கூறினார். 2023-ல் இருவரும் ஒரு கேஜ் ஃபைட்டிற்கு (Cage Fight) கூட சவால் விட்டுக்கொண்டனர். எனவே தற்போதைய சர்ச்சை ஒரு கார்ப்பரேட் மார்க்கெட்டிங் போராகவும் பார்க்கப்படுகிறது.
எளிமையாகச் சொன்னால், இது உங்கள் செய்திகளை ஒரு ரகசியக் குறியீடாக மாற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பமாகும். இதை அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே படிக்க முடியும். இணையச் சேவை வழங்குநர், ஹேக்கர்கள் அல்லது வாட்ஸ்அப் நிறுவனமே நினைத்தாலும் உங்கள் செய்திகளையோ, புகைப்படங்களையோ அல்லது அழைப்புகளையோ பார்க்கவோ கேட்கவோ முடியாது.
வாட்ஸ்அப்பில் நாம் மருத்துவர்களின் அறிக்கைகள், வழக்கறிஞர்களின் மனுக்கள் எனப் பல ரகசியங்களைப் பகிர்கிறோம். ஒரு நுகர்வோராக நாம் எதைத் தேடுகிறோம் என்பது நிறுவனங்களுக்குத் தெரிந்தால், அவர்கள் நம்மை ஒரு சந்தைப் பொருளாகப் பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு, நீங்கள் கூகுளில் ஒரு ஹோட்டலைத் தேடினால், உங்கள் தரவு விற்கப்பட்டால், உடனடியாக உங்களுக்கு ஹோட்டல்களிடமிருந்து விளம்பரச் செய்திகள் வரத் தொடங்கும்.
இந்தச் செய்தி குறித்து ஒரு நிபுணர் கூறுகையில், "இந்த வழக்கைத் தாக்கல் செய்த வழக்கறிஞர்கள், இதற்கு முன்பு வாட்ஸ்அப்பை ஹேக் செய்ய முயன்ற 'என்எஸ்ஓ குரூப்' (NSO Group - Pegasus உருவாக்கியவர்கள்) சார்பாக வாதிட்டவர்கள். எனவே இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கலாம். வாட்ஸ்அப் பயன்படுத்தும் 'டிஃபி-ஹெல்மேன் அல்காரிதம்' (Diffie-Hellman algorithm) என்பது மிகவும் பாதுகாப்பான ஒரு சர்வதேச தரமாகும். சிக்னல் போன்ற பிற தளங்களும் இதையே பயன்படுத்துகின்றன. எனவே, இதுபோன்ற செய்திகளின் பின்னணியை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இது ஈலான் மஸ்க், மெட்டா அல்லது டெலிகிராம் இடையிலான கார்ப்பரேட் போராக இருந்தாலும், இறுதியில் சாதாரண மக்களின் மனதில் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது. உண்மை என்ன என்பது நீதிமன்ற விசாரணையில் தான் தெரியவரும்.
வாட்ஸ்அப் தனது பயனர்களின் தனிப்பட்ட செய்திகளை ரகசியமாக இடைமறித்துப் படிக்கிறது என்றும், அந்தத் தகவல்களை மெட்டா (Meta) நிறுவனம் அக்சென்ச்சர் போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்கிறது என்றும் கூறி கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பிரையன் ஒய் ஷார்ஜி மற்றும் நிதா சாம்சன் என்ற இரண்டு பயனர் பிரதிநிதிகள் இந்த 'கிளாஸ் ஆக்ஷன்' (Class Action) வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று வாட்ஸ்அப் மறுத்துள்ளது. தாங்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 'சிக்னல் புரோட்டோகால்' (Signal Protocol) எனும் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு முறையைப் பயன்படுத்துவதாகவும், பயனர் செய்திகள் 100% பாதுகாப்பானவை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் தகவல்கள் நிறுவனங்களுக்குத் தெரிந்தால், உங்களை ஒரு நுகர்வோராகக் கருதி, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப விளம்பரங்களைக் காட்டி உங்களைக் குறிவைப்பார்கள் (Targeted Advertising). மேலும், தனிப்பட்ட ரகசியங்கள் கசிவது பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.
இப்போதைக்கு இவை வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. நீதிமன்ற விசாரணை முடிவடைந்த பின்னரே உண்மை தெரியவரும். இருப்பினும், மிக முக்கியமான வங்கித் தகவல்கள் அல்லது தனிப்பட்ட ரகசியங்களை டிஜிட்டல் தளங்களில் பகிரும்போது எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ