)
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் கடுமையான தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்ட நிலையில், தற்போது ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 23) முதல் இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. போர் தொடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், எதிர்பாராத விதமாக போர் களத்தில் அமெரிக்க குதித்துள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது சமூக வலைதளத்தில் ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். இப்போது அனைத்து விமானங்களும் ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளன. முதன்மை தளமான ஃபோர்டோவில் குண்டுகள் முழுமையாக வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக வீடு திரும்புகின்றன. நமது சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். உலகில் வேறு எந்த இராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி என தெரிவித்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஈரான், நேற்று (ஜூன் 23) அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருக்கிறது ஈரான். ஆனால் ஏவபட்ட ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்து அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். 24 மணி நேரத்திற்குள் இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்தார். மேலும், இந்த போர் நிறுத்தத்தின் மூலம் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் எதுவும் இல்லை என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ஈரான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளபடி, இஸ்ரேல் ஈரான் மீது போரை தொடங்கியது, அதற்கு நேர்மாறாக அல்ல. தற்போதைக்கு, எந்தவொரு போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்தும் எந்த "ஒப்பந்தமும்" இல்லை. இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் போரின் போதும் போர் நிறுத்தத்தை நான் தான் தலையிட்டு நிறுத்தியதாக அவர் கூறி இருந்தார். அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது ஈரான் இஸ்ரேல் விவகாரத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதனை உடனே ஈரான் மறுத்திருக்கிறது.