)
கடந்த ஜனவரி மாதம், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருக்கும் பிரபல வணிக வளாகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 72 பேர் உயிரிழந்தனர். கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வந்தது. இதில், திடுக்கிடும் திருப்பம் நிகழ்ந்துள்ளது.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த தீ விபத்தில், 72 பேர் உயிரிழந்தது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். அதில், 11 வயது சிறுவன் ஒருவன் குற்றவாளியாக இணைக்கப்பட்டிருந்தான்.
கடந்த ஜனவரி 17ஆம் தேதியன்றி, சத்தாரில் அமைந்துள்ள குல் பிளாசா வணிக வளாகத்தில்தான் இந்த பெரும் தீ விபத்தானது ஏற்பட்டது. இதில், அந்த வளாகமே முற்றிலுமாக அழிந்தது. மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரவே, அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் பிடித்தது.
ஜனவரியில் ஏற்பட்ட அந்த தீ விபத்து தொடர்பாக, போலீசார் இரு தினங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், தீ விபத்தை ஏற்படுத்திய அந்த சிறுவனும், அவனுடைய தந்தையும் தீ விபத்து ஏற்பட்ட அந்த நாளில் இருந்து தலைமறைவாக இருப்பதாகவும், இதில் மேலும் 4 குற்றவாளிகள் இருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தரப்பும் சில சாட்சியங்களை வழங்கியிருக்கிறது. இதில், அந்த சிறுவன் தந்தை இல்லாத நேரங்களில் வணிக வளாகத்தில் செயற்கை பூக்கடை ஒன்றை நடத்தி வந்ததாகவும், அவன் தீக்குச்சிகளுடன் விளையாடி கொண்டிருந்த போது தீ மூட்டியதாகவும் கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள பிற குற்றவாளிகளுடன் அந்த சிறுவனும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவான் என்று, மாவட்ட அரசு வழக்கறிஞர் அப்துல் ரசாக் குஜ்ஜார் தெரிவித்திருக்கிறார்.
குல் பிளாசாவின் நிர்வாக குழு உறுப்பினர்களான தன்வீர் பாஸ்தா, அமர் இஸ்மாயி, முகமது ரமலான் மற்றும் முகமது அமீன் ஆகியோர், பிற குற்றவாளிகளாக குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை செய்யும் அதிகாரி, தன்னுடைய குற்றப்பத்திரிகையில் 42 அரசு தரப்பு சாட்சிகளை பட்டியலிட்டிருக்கின்றனர். இதன்படி, இந்த தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்ததும், 8 பேர் காயமடைந்ததும், மொத்தம் 1,153 கடைகள் எரிந்து நாசமாகியிருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நீதித்துறை ஆணையத்தின் அறிக்கையும் உருவாக்கப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று குஜ்ஜார் தெரிவித்தார்.
குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பாக, 13 வயது சிறுவன் ஒருவரின் வாக்குமூலம் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அந்த சிறுவன், குல் பிளாசாவில் இருக்கும் தன்னுடைய நண்பனின் கடையில் இருந்த போது, தீக்குச்சிகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.