Russia Plane Crash 49 Dead : ரஷ்யாவின் An-24 என்கிற பயணிகள் ரக விமானம் ஒன்று, திடீரென்று மாயமானது. இந்த விமானம் ஆனது, அமுர் எனும் பகுதியில் விழுந்து நொறுங்கி, தீப்பிடித்து எரிந்ததாக சொல்லப்படுகிறது. இதில், விமானத்தில் பயணித்த 49 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Russia Plane Crash 49 Dead : அகமதாபாத், ஏர் இந்தியா விமான விபத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. பல்வேறு கனவுகளுடன் லண்டன் நோக்கி இந்த விமானத்தில் பயணித்த 200க்கும் மேற்பட்ட உயிர்கள், கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று பறிபோயின. விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமன்றி, அந்த விமானம் மோதிய மருத்துவ மாணவர்கள் தங்கும் விடுதியில் இருந்தவர்கள் பலரும் உயிரிழந்தனர். மொத்தமாக 290க்கும் மேற்பட்டவர்கள் இதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விமான விபத்து நடந்த வெகு சில நாட்களிலேயே, தற்போது அதே போன்ற ஒரு கோர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அங்காரா ஏர்லைன்ஸின் AN-24 பயணிகள் ரக விமானம், ஜூலை 24ஆம் தேதியான இன்று, இந்திய நேரப்படி பகல் 1 மணிக்கு பிலாகோவெஷ்சென்ஸ்க் எனும் நகரில் இருந்து புறப்பட்டிருக்கிறது. இந்த விமானம், தைண்டா எனும் நகரை அடைய வேண்டி இருந்திருக்கிறது. இதில், 6 விமான பணியாளர்கள், 5 குழந்தைகள் உள்பட 49 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த விமானம் கிழக்கு ஆமூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விமான நிலையத்துடன் தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. எவ்வளவு முயற்சி செய்தும் தொடர்பை ஏற்படுத்த முடியாமல் போயிருக்கிறது. இதையடுத்து, ரஷ்யாவின் பேரிடர் அமைச்சகம் விமானத்தை தேடும் பணியில் இறங்கியது. எந்த ரேடாரில் இருந்து விமானம் மறைந்தததோ, அந்த பகுதியில் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணியை தொடங்கினர்.
தைண்டாவு நகருக்கு சுமார் 15 கி.மீ தொலைவில், விமானத்தின் சிதறிய துண்டு ஒன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரஷ்ய பேரிடம் அமைச்சகம், விமானத்தில் பயணித்த யாருமே உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அறிவித்தது. இந்த நிலையில், விமானத்தின் சிதறி விழுந்துள்ளதை காண்பிக்கும் வீடியோவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீடியோ:
வெளியாகியிருக்கும் அந்த வீடியோ ரஷ்ய மீட்புக்குழுவினரால் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. விமானத்தின் துண்டு சிதறி விழுந்த இடத்தில் நெருப்பும் புகையும் சூழப்பட்டுள்ளதும், அதை ஹெலிகாப்டரில் இருந்து படம் பிடித்திருப்பதும் இதில் காண்பிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
விமானத்தின் முழு பகுதி கண்டுபிடிக்கப்பட்ட பிறகே, இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தெரியவரும். இப்போது வரை, விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு அல்லது மனித தவறு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அடுத்தடுத்த விமான விபத்துகள்:
கடந்த சில மாதங்களில், விமான விபத்துகள் மற்றும் தவிர்க்கப்பட்ட விமான விபத்துகள் குறித்த செய்தி அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, சில நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் போர் விமானம் பள்ளியில் மோதி குழந்தைகள், ஆசிரியர்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தது, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதே போல ரஷ்ய விமானமும் விழுந்து நொறுங்கியிருப்பது விமான பயணத்தை அடிக்கடி மேற்கொள்வோரிடையே பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ