)
Trump Tariffs: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று சுமார் 7 மாதங்களாகிவிட்டன. இந்த 7 மாதங்களில் டிரம்ப்பின் பல்வேறு அதிரடியான அறிவிப்புகள், முடிவுகள் பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அவர் உலகளவிலான வர்த்தக உறவில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் வகையில், ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனி இறக்குமதி வரியை கொண்டுவந்தார்.
அதன்படி, இந்தியாவுக்கு முதலில் 25% வரி அறிவிக்கப்பட்டது. இது மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சற்று அதிகமாக இருந்தது. ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை பெற்று, இந்தியா அதனை பொது சந்தையில் விற்பனை செய்து வருவாதக குற்றஞ்சாட்டி அமெரிக்கா இந்தியாவின் மீது இந்த வரியை நிர்ணயித்தது. தொடர்ந்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ததால் 25% ஆக இருந்த வரி 50% ஆக உயர்த்தப்பட்டது. இந்த வரி உயர்வு கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று முதல் அமலுக்கு வந்தது.
அந்த வகையில், டொனால்ட் டிரம்பின் இந்த அதிரடி வரி விதிப்புக்கு எதிராக நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரணித்த நீதிபதிகள், டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுகள் அவரின் அதிகாரத்தை மீறிய செயல் எனவும், வரி குறித்த அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தது.
தொடர்ந்து அமெரிக்க அரசு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் சென்றது. அமெரிக்க அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து மேல்முறையீட்டு நீதிமன்றம், டிரம்ப் விதித்த வரிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்றும் இத்தகைய வரிகளை விதிக்க டிரம்பிற்கு அதிகாரம் இல்லை என்றும் இன்று தீர்ப்பு வழங்கியது.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்த விவகாரத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. இதனால் இந்த வரிகள் அனைத்தும் தற்சமயம் அமலில் இருக்கும். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வந்த சில மணிநேரங்களிலேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளார். விதிக்கப்பட்ட வரிகள் நீக்கப்பட்டால் அது நாட்டிற்கே பேரழிவை ஏற்படுத்தும் என்று டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது Truth Social பக்கத்தில் போட்ட நீண்ட பதிவில், "அனைத்து வரிகளும் தற்போது நடைமுறையில்தான் உள்ளன! இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நமது வரிகளை நீக்க வேண்டும் என்று தவறாக உத்தரவிட்டுள்ளது, ஆனால் இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த வரிகள் எப்போதாவது நீக்கப்பட்டால், அது நாட்டிற்கு முழுமையான பேரழிவாக இருக்கும். அது நம்மை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும், நாம் வலுவாக இருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில், "அமெரிக்க தொழிலாளர்களுக்கு உதவுவதற்கும், சிறந்த அமெரிக்க தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் இந்த வரிவிதிப்பு சிறந்த கருவி என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
பல ஆண்டுகளாக, நமது அக்கறையற்ற மற்றும் விவேகமற்ற அரசியல்வாதிகளால் வரிவிதிப்பு நமக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இப்போது, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன், அவற்றை நமது தேசத்தின் நன்மைக்காகப் பயன்படுத்துவோம். மேலும் அமெரிக்காவை மீண்டும் பணக்காரர்களாகவும், வலிமையானவர்களாகவும், சக்திவாய்ந்தவர்களாகவும் மாற்றுவோம்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ