முஜ்தபா காமேனி செய்திகள்: ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் அதிகாரத்தின் உச்சமான 'ரஹ்பர்-ஏ-முவாஸம்' (Supreme Leader) பதவிக்கு, மறைந்த அலி கமேனியின் மகன் சையத் முஜ்தபா ஹுசைனி கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் மசூதிகளில் அவருக்கு விசுவாசம் தெரிவிக்கும் நிகழ்வுகள் தொடங்கின. மசூதிகளுக்கு வெளியே மக்கள் கூட்டம் அலைமோதியது. ஈரான் மக்கள் ஆயதுல்லா முஜ்தபா காமேனிக்கு ஆதரவு தெரிவிக்கவும், 'பயத்' (விசுவாசப் பிரமாணம்) செய்யவும் திரண்டுள்ளனர். மக்களின் ஆதரவை பார்த்து மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த சையத் முஜ்தபா ஹுசைனி கமேனி? ஈரான் புதிய உச்ச தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறது? போன்ற விவரங்களை பார்ப்போம்.
ஈரான் புதிய உச்ச தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்?
சையத் முஜ்தபா ஹொசைனி காமேனி, அலி காமேனியின் மகன் ஆவார். 'ஆயதுல்லா ஃபகிஹ் முஜ்தஹித்' என்பது ஈரானின் உயரிய மதத் தலைவர்களைக் குறிக்கும் சொல்லாகும். ஈரானில் இவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்ப இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களை உள்ளடக்கியே 'அசெம்பிளி ஆஃப் எக்ஸ்பர்ட்ஸ்' (Assembly of Experts) உருவாக்கப்படுகிறது. இதில் 88 முஜ்தஹித்கள் (இஸ்லாமிய சட்ட வல்லுநர்) உள்ளனர். இவர்களே 'ஆயதுல்லா ஃபகிஹ்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஈரான் புதிய உச்ச தலைவருக்கு மக்களின் ஆதரவு
ஜம்காரன் மசூதி உட்பட ஈரானின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களின் 'பையத்' (விசுவாசம்) தெரிவித்து வருகின்றனர். இது வெறும் தனிநபர் தேர்வு அல்ல, ஒட்டுமொத்த ஈரானிய மக்களின் பிரதிநிதித்துவம் என்று காட்டப்படுகிறது.
சையத் முஜ்தபா ஹுசைனி கமேனி தேர்வு செய்ய காரணம் என்ன?
சையத் முஜ்தபா ஹுசைனி கமேனி தேர்வு என்பது பரம்பரை அரசியலா? அல்லது தகுதியா? எனப் பார்த்தால், ஈரானிய புரட்சியின் நோக்கமே மன்னராட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் எதிரானது. முதல்முறையாக தந்தைக்குப் பின் மகன் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இருப்பினும், அவர் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையினருடன் (IRGC) கொண்டுள்ள நெருக்கமான உறவே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் புதின் முஜ்தபாவின் தேர்வுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்ச தலைவரின் அதிகாரம் என்ன தெரியுமா?
ஈரானின் உச்ச தலைவர் என்பவர் ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், நாட்டின் ராணுவத்தின் உச்ச தளபதியாகவும் (Supreme Commander), அரசியலமைப்பு ரீதியாக இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவராகவும் திகழ்கிறார்.
ஈரான் புதிய உச்ச தலைவர் அமெரிக்காவிற்கு சிக்கலா?
அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரான் நிலைகுலைந்துவிடும் என எதிர்பார்த்த டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலுக்கு, இந்த விரைவான தேர்வு ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஈரானின் உள்விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என்ற செய்தியை இது உரக்கச் சொல்கிறது.
ஈரான் போரிலிருந்து பின்வாங்காது என அறிவிப்பு
ஈரானின் புதிய உச்ச தலைவர் சையத் முஜ்தபா ஹுசைனி கமேனி தேர்வு செய்யப்பட்டதன் மூலம், ஈரான் தனது விவகாரங்களைத் தானே தீர்மானிக்கும், அமெரிக்காவின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அல்ல என்பதை இது உணர்த்துகிறது. அலி காமேனியின் மரணத்திற்குப் பிறகு, தனது அனுமதியின்றி புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரைக் கொன்றுவிடுவேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் காமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கும் வரை ஈரான் போரிலிருந்து பின்வாங்காது என்று ஈரான் அறிவித்துள்ளது.
சையத் முஜ்தபா ஹுசைனி கமேனி மீது தாக்குதல் நடத்துவோம் -டிரம்ப்
கடந்த வெள்ளிக்கிழமை அன்று டிரம்ப் சிஎன்என்-னிடம் பேசுகையில், ஈரானின் தலைமை அழிக்கப்பட்டுவிட்டது என்றும், இப்போது அமெரிக்காவையும் இஸ்ரேலையும் மதிக்கும் ஒரு தலைமை அங்கு வர வேண்டும் என்றும் கூறினார். அவர்கள் மதத் தலைவர்களாக இருந்தாலும் சரி, ஜனநாயகவாதிகளாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றார். அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாகத் தேர்வு நடந்தால் தாக்குதல் நடத்துவோம் என்று டொனால்ட் டிரம்ப் இரண்டு முறை எச்சரித்துள்ளார். நெதன்யாகு பல தசாப்தங்களாக ஈரானில் ஆட்சி மாற்றத்தைப் பற்றிப் பேசி வருகிறார்.
சையத் முஜ்தபா ஹுசைனி கமேனியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
ப்ளூம்பெர்க் (Bloomberg) அறிக்கையின்படி, முஜ்தபா காமேனி பல முதலீட்டு வணிகங்களை நடத்தி வருவதாகவும், லண்டனில் சொத்துக்கள் மற்றும் சுவிஸ் வங்கி கணக்குகளைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரது சொத்து மதிப்பு பில்லியன் டாலர்களில் இருக்கலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இருப்பினும், ஈரானைப் பற்றிய மேற்கத்திய ஊடகங்களின் அறிக்கைகள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஈரான் மீது பல தசாப்தங்களாகத் தடைகள் இருக்கும்போது, அவர் எப்படி இவ்வளவு முதலீடுகளைச் செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
ஆயதுல்லா என்றால் என்ன?
ஈரானிய அதிகார அமைப்பில் உள்ள ஆயதுல்லா என்ற சொல்லுக்கு "இறைவனின் அடையாளம்" (அதி உயர் மத குரு) எனப் பொருள்படும்.
வலியே ஃபகீஹ் என்றால் என்ன?
ஈரானிய அதிகார அமைப்பில் உள்ள மற்றொரு சொல் வலியே ஃபகீஹ் ஆகும். இதற்கு அர்த்தம் என்னவென்றால் இஸ்லாமிய சட்டத்தின் பாதுகாவலர் எனப் பொருள்படும்.
முஜ்தஹித் என்றால் என்ன?
ஈரானிய அதிகார அமைப்பில் பேசப்படும் இன்னொரு சொல் முஜ்தஹித். இதன் பொருள் "குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் சட்டங்களை விளக்கும் அறிஞர்" என்பதாகும்.
ரஹ்பர்-ஏ-முவாஸம் என்றால் என்ன?
ஈரானிய அதிகார அமைப்பில் அதிக அதிகாரம் படைத்தது தான் "ரஹ்பர்-ஏ-முவாஸம்" ஆகும். ரஹ்பர்-ஏ-முவாஸம் என்பது "ஈரானின் உச்ச தலைவரை" (Supreme Leader) குறிக்கும்.
மேலும் படிக்க - எண்ணெய் கிணறுகளை தொடாதீங்க... இஸ்ரேல் மீது டென்ஷனாகும் அமெரிக்கா - பின்னணி என்ன?
மேலும் படிக்க - காமேனியின் மகன் இருக்காரா...? இறந்துவிட்டாரா...? ஈரான் உச்சபட்ச தலைவரின் கதி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









