புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரையும் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், துணைநிலை ஆளுனர் கிரண்பேடியின் உரையுடன் புதுச்சேரி சட்டசபை இன்று கூடியது. 


முன்னதாக, புதுவையில் பாஜகவை சேர்ந்த வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 


பின்னர், நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. க.லட்சுமிநாராயணன், திமுக நிர்வாகி தனலட்சுமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் எனத் தீர்ப்பளித்தது.



 இந்நிலையில், புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.


கடந்த முறை என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அப்போதைய முதல்- அமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். அதுவே தற்போதும் நடை முறையில் இருந்து வருகிறது.


காலை 9.30 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கவர்னர் உரையை தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி புதுச்சேரி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.



இதற்கிடையில் சபாநாயகரின் தடையை மீறி சட்டசபைக்குள் நுழைய முயன்று பா.ஜ.,வை சேர்ந்த 3 நியமன எம்எல்ஏ.,க்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவை காவலர்களுக்கும், நியமன எம்எல்ஏ.,க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போலீசார் சட்டசபைக்குள் செல்ல அனுமதி மறுத்ததை அடுத்து 3 பா.ஜ., நியமன எம்எல்ஏ.,க்களும் சட்டசபை முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.