வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு தொடர்பாக, தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரும் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் தொடர்பாக 20.3.2018 அன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து வடமாநிலங்களில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் பத்து பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் காயமடைந்தார்கள்.


இந்நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரும் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 
இதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை  அவர் அறிவித்தார்.


இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.


பட்டியல் இன மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அண்மையில் உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்த உத்தரவுகள் குறித்து பரிசீலனை செய்ய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில், பட்டியல் இன மற்றும் பழங்குடி இனத்தவரின் நலனைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக, தமிழகத்தின் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 


இந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக தாக்கல் செய்ய, அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசின் செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தீர்ப்பு விவரம்; வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த மார்ச் 20-இல் தீர்ப்பு வழங்கியது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதாக கருத்து தெரிவித்தது. 


மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி அல்லது தனிநபரை உடனடியாக கைது செய்யக் கூடாது. உயரதிகாரிகளின் அனுமதி பெற்று விசாரணை நடத்த வேண்டும். முதல்கட்ட 
விசாரணையை டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும். அதன்பிறகு புகாரில் அடிப்படை ஆதாரம் இருந்தால் கைது செய்யலாம். பொய்ப் புகார்கள் மூலம் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.


முன்னதாக, தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வற்புறுத்தியும் 16-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, கனிமெழி, திருமாவளவன், பேராசிரியர் காதர்மைதீன், பாலகிருஷ்ணன், முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிபிடத்தக்கது.