நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரம்ப முதலே அதிக இடங்களில் முன்னணி வகித்த பாஜக 350 இடங்களில் முன்னணி பெற்று மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. காங்கிரஸ் கூட்டணி 91 இடங்களிலும், மற்றவை 100 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 


அதில் பாஜக தனித்து 303 இடங்களை பெற்றுள்ளது. அதேபோல 52 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதேபோல கடந்த 2014 மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் நிலைக்கு காங்கிரஸ் சென்றுள்ளது.


இந்நிலையில், தோல்வியை குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 


இரண்டாவது முறை சந்தித்த மோசமான தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று டெல்லியில் கூடுகிறது. அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்க்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை காங்கிரஸ் கட்சி எடுக்க இருப்பதாக தெரிகிறது.