நாடு முழுவதும் உள்ள மாசு உண்டாக்கும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூடவேண்டும் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிரப்பித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள 88 முக்கிய தொழிற்பேட்டைகளில் கடந்த 2009-10-ஆம் ஆண்டில் ஆய்வு செய்தது. நிலத்தடிநீர், காற்று, அபாயகரமான கழிவுகளை வெளியேற்றுதல் ஆகியவைகளின் அடிப்படையில் எந்த அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது என ஒவ்வொரு பகுதியையும் வகைப்படுத்தியது.
 
மாசு ஏற்பட்ட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளை ‘ஆபத்தான மாசடைந்த பகுதி’, ‘தீவிரமான மாசடைந்த பகுதி’, ‘இதர மாசடைந்த பகுதி’ என 3 வகையாக பிரித்து பட்டியலிட்டது. 


இந்த பிரச்சனை குறித்து விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல், கடந்த 5 ஆண்டுகளில் தொழிற்சாலைகள் ஏற்படுத்திய மாசுவை மறுசீரமைக்கவும், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்துக்கான மதிப்பு ஆகியவற்றை அந்தந்த தொழிற்சாலைகளில் இருந்து இழப்பீடாக வாங்க வேண்டும் என்று உத்தரவு பிரப்பித்தார். அதோடு இதுபோன்ற தொழிற்சாலைகளை தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.


இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல், ஆபத்தான மாசடைந்த பகுதி மற்றும் தீவிரமான மாசடைந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 3 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிரப்பித்துள்ளார்.


சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற பிரிவுகளான இந்த தொழிற்பகுதிகளில் மேற்கொண்டு தொழிற்சாலைகள் அமைக்கவோ, தொழிற்சாலைகளை விரிவுபடுத்தவோ அனுமதிக்கக்கூடாது எனவும், அந்த பகுதி குறிப்பிட்ட அளவு மாசு குறையும் வரை அல்லது அந்த பகுதி தாங்கும் அளவுக்கு மேம்படுத்தப்படும் வரை இந்த அனுமதிகள் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.