ஆல்வார் பலாத்கார வழக்கு எனக்கு ஒரு அரசியல் பிரச்சனை அல்ல: ராகுல் காந்தி
ஆல்வார் கூட்டு பலாத்கார சம்பவம் எனக்கு ஒரு அரசியல் பிரச்சினை அல்ல, நீதி வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!!
ஆல்வார் கூட்டு பலாத்கார சம்பவம் எனக்கு ஒரு அரசியல் பிரச்சினை அல்ல, நீதி வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!!
ராஜஸ்தானில் ஆள்வார் தனகாஜி புறவழி சாலையில் தலித் இளம்பெண் கணவருடன் சென்று கொண்டிருந்த போது 6 பேர் கும்பல் வழிமறித்து தாக்கி கடத்தி சென்றது. மறைவான இடத்திற்கு சென்றதும் கணவர் கண் எதிரிலேயே அந்த இளம்பெண்ணை 5 பேர் கற்பழித்தனர். அந்த பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படும் காட்சிகளை ஒருவன் வீடியோவில் பதிவு செய்தான். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய கணவனும், மனைவியும் போலீசில் சென்று புகார் செய்தனர். அந்த சமயத்தில் ராஜஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டு இருந்ததால் போலீசார் அந்த பெண்ணின் புகாரை ஏற்கவில்லை.
ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு கடந்த 2 ஆம் தேதிதான் ராஜஸ்தான் போலீசார் FIR பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் அந்த பெண் பாலியல் துன்புறுத்தல் காட்சிகள் கொண்ட வீடியோ பதிவை கடந்த 4 ஆம் தேதி குற்றவாளிகளில் ஒருவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டான். இதையடுத்து ராஜஸ்தானில் ஆள்வார், ஜெய்ப்பூர், தவுசா பகுதிகளில் வன்முறை வெடித்தது. காங்கிரஸ் அரசு திட்டமிட்டு பெண் கற்பழிப்பை மறைத்ததாக பா.ஜனதா கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றார். ஆள்வார் நகருக்கு சென்ற அவர் கற்பழிக்கப்பட்ட தலித் பெண்ணை சந்தித்து ஆறுதல் கூறினார். சுமார் 45 நிமிடங்கள் ராகுல், அந்த பெண் வீட்டில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ராகுல் கூறுகையில், இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் நான் அசோக் கெலாட்டிடம் தொடர்பு கொண்டு பேசினேன். சிலர் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்கள். என்னை பொருத்தவரை இது அரசியல் சர்ச்சைக்குரிய விஷயமல்ல. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும். குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.