கடந்த 2010-ம் ஆண்டு பிள்ளைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்கக்கூடாது என்றும், அவர்களை ஆல் பாஸ் பெறச்செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சட்டதின் படி எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ் அளிக்கப்பட்டு அடுத்த வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.


இதற்கிடையே, இந்த ஆல் பாஸ் முறையால் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக மாநிலங்களும், கல்வியாளர்களும் முறையிட்டனர். இதனால், ஆல் பாஸ் முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. 


இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூடத்தில் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறையை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு இறுதியாண்டு தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களை பெயில் ஆக்குவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இருப்பினும், அதற்கு முன்பாக, அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். 


இந்த மாற்றங்கள், இலவச கல்வி உரிமை மசோதாவில் சேர்க்கப்பட்டு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.