புது டெல்லி: வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் மற்றும் மவுஜ்பூரில் திங்கள்கிழமை திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகுமாறு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. டெல்லியில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாக அமித் ஷாவின் "மவுனம்" குறித்தும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. மேலும் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆத்திரத்தை கட்டுப்படுத்தி, இரக்கம் மற்றும் புரிதலைக் காட்டுமாறு மக்களை வலியுறுத்தினார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நகரத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தவறியதற்காக தில்லி காவல்துறையையும் கட்சி குற்றம் சாட்டியதுடன், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் "தனது பொறுப்பை மறந்துவிட்டார்" என்று விமர்சித்துள்ளது. தில்லி மக்கள் ஒரு அரசியல் பழிவாங்கும் விளையாட்டுக்கான விலையை செலுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


அமைதியான போராட்டங்கள் தான் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம், ஆனால் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என ராகுல் காந்தி கூறினார். தனது ட்விட்டர் பக்கத்தில் "டெல்லியின் வன்முறை கவலைக்குரியது, சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம், ஆனால் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. டெல்லி குடிமக்கள் எந்தவிதமான ஆத்திரமூட்டல்களைப் பொருட்படுத்தாமல் கட்டுப்பாடு, இரக்கம் மற்றும் புரிதல் ஆகியவற்றைக் காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.


அமைதியை நிலைநாட்ட டெல்லியில் உள்ள மக்களை வலியுறுத்திய பிரியங்கா காந்தி வத்ரா, வன்முறையால் நாடும், மக்களும் தான் பாதிக்கப்படுகிரார்கள். வன்முறையைக் கட்டுப்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும் என்றார். 


அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி இன்று நாள் முழுவதும் வன்முறையைக் கண்டது. வன்முறை என்பது சாமானிய மக்களையும் நாட்டையும் மட்டுமே சேதப்படுத்துகிறது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது நமது அனைவரின் பொறுப்பு" என்று அவர் கூறினார்.