ஒடிசாவில் புயல் மிகவும் வலிமையுடன் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசா மாநிலம் பூரியை அடுத்த கடல்பகுதியில் நாளை மாலை 5.30 மணிக்கு ஃபானி புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், 200 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் ஒடிசாவில் உச்சக்கட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பத்துலட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


ஒடிசாவின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் புயல் வேகத்தை கண்காணித்து வருகின்றனர். 879 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு லட்சக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பள்ளிகள், அரசு அலுவலகங்களும் தற்காலிக புயல் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் விடுமுறையை ரத்து செய்து பணிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர மின்சாரம், தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டால் உடனடியாக பழுதை சரிசெய்ய வல்லுனர் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே  கிழக்குக் கடலோரப் பகுதிகள் வழியாக இயக்கப்படும் 103 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


புரியில் கரையைக் கடந்தவுடன் ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று மேற்கு வங்கத்துக்குள் பானி புயல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பானி புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது. 


மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஒடிசா அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல், பானி புயல் காரணமாக, ஒடிஸாவின் 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 43- க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.