ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்த பெய்ட்டி புயல், சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமாக்கியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் கரையைக் கடந்தது. கட்ரன்கோனா கிராமத்தின் வழியே புயல் கரையை கடந்தபோது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதுடன், கனமழையையும் கொட்டித் தீர்த்தது.


இதன் காரணமாக கிழக்கு கோதாவரி, குண்டூர், கிருஷ்ணா, விஜயநகரம், விசாகபட்டினம், விஜயவாடா ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. விஜயவாடாவில் பலமணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள், குடியிருப்புகள் மழை வெள்ளத்தால் சூழந்தது. 


கடற்படை கப்பல்களான ஜோதி மற்றும் சக்தி ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. தலைநகர் அமராவதியில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு நிலைமையை கண்காணித்து அதிகாரிகளுக்கு உடனுக்குடன் உத்தரவு பிறப்பித்தார்.


கனமழை பெய்ததால், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. 26,000 மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட தானியங்கள் வீணாகியுள்ளன. புயல் காரணமாக விசாகப்பட்டினம், விஜயவாடா நகரங்களில் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது!