டெல்லி: ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரம் தொடர்பாக நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் நாடு தளுவிய போராட்டத்திற்கு ஆதரவு கிடையாது என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்து உள்ளது.    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகிறார்கள்.


பீகார் மாநிலத்தில் நாளை வேலை நிறுத்தத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரீய ஜனதா தளம் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரம் தொடர்பாக நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் நாடு தளுவிய போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்து உள்ளது.   


இந்த நிலையில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். 


பாட்னாவில் நடந்த மது ஒழிப்புநாள் நிகழ்ச்சியில் பேசிய நிதிஷ்குமார்:-


பிரதமர் மோடியின் பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பை நான் ஆதரிக்கிறேன். இந்த நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிக்க மிகவும் உதவியாக இருக்கும். மிகப்பெரிய அளவில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அதனை முழுமையாக வங்கி கணக்கில் செலுத்த முடியாது. மேலும் புழக்கத்தில் உள்ள கருப்பு பணம் அளவுக்கு புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கியால் வெளியிடவும் முடியாது.


செல்லாத நோட்டு அறிவிப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கை தைரியமான ஒன்று. இந்தியாவை கருப்பு பணம் இல்லாத நாடாக மாற்றும். கருப்பு பணத்தை தங்கம், வைரம், ரியல் எஸ்டேட்டுகளில் முதலீடு செய்கிறார்கள். இந்த நேரத்தில் நான் பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன். பினாமி சொத்துக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மதுவை தடை செய்தாலும் கருப்பு பணத்தை ஒழிக்க முடியும்.


பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளோம். இங்கு பெரும்பாலானோர் கள்ளச் சாராய தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து பினாமிகள் பெயர்களில் சொத்துக்களை குவித்துள்ளனர்.


என அவர் பேசினார்.