தன்னம்பிக்கையால் தனது வாழ்க்கையில் முன்னேறியுள்ள பிரணவ், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்தவர். சராசரி இளைஞர்கள் செய்யும் காரியங்களை மட்டுமல்லாமல், அவர்கள் செய்யாத காரியங்களையும் கைகள் இல்லாமல் செய்து வருகிறார் பிரணவ். 


பட்டப்படிப்பை முடித்த இவர், ஓவியம் வரைவதிலும் கெட்டிகாரராக இருந்து வருகிறார். தனது ஓவிய திறமையால் அனைவராலும் அறியப்பட்ட பிரணவ் சமீபத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களை சந்தித்தார், இந்நிலையில் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்திதுள்ளார்.


சமீபத்தில் கேரளப் பேரிடர் நிவாரண நிதிக்காக, தனது பங்கை முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து பிரணவ் கொடுத்திருந்தார். அப்போது, பினராயி விஜயனுடன், பிரணவ் எடுத்த செல்பி நாடு முழுவதும் வைரலானது. இதனைத்தொடர்ந்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த அவர், நடிகர் ரஜினியைச் சந்திக்க வேண்டுமென்பது தனது வாழ்நாள் கனவு என்று கூறியிருந்தார். 



இதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினி தரப்பினர், பிரணவை தொடர்பு கொண்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து இன்று ரஜினியை காண அவரது இல்லத்திற்கு பிரணவ் வரவழைக்கப்பட்டார். மேலும், பிரணவ் மற்றும் அவரது பெற்றோருக்கு ரஜினி தரப்பில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 



சந்திப்பின் போது, பிரணவின் எதிர்கால லட்சியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினி கேட்டறிந்திந்திருக்கிறார். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட ரஜினி, `எல்லாமே நல்லபடியா நடக்கும். என்னோட சப்போர்ட் எப்பவும் இருக்கும்' என்று கூறி தனது பெர்சனல் போன் நம்பரையும் பிரணவிடம் கொடுத்திருக்கிறார். அப்போது ரஜினிக்காக தான் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பிரணவ் வழங்கினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. அதேவேளையில் ரஜினியுடன் தனது ஸ்பெஷல் செல்பி ஒன்றையும் பிரணவ் எடுத்துள்ளார்.