பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் சிக்கிய நீரவ் மோடியின் ரூ.56 கோடி மதிப்பிளான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி வரை கடன் பெற்ற திருப்பியளிக்காமல் வெளிநாடு தப்பி சென்றதாக தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோரின் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தனித்தனியே முறைகேடு வழக்கு தொடுத்திருந்தனர்.


இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமாக இந்தியாவில் இருக்கும் ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 25-ஆம் நாள் நீரவ் மோடிக்கு சொந்தமாக ஹாங்காங்கிலுள்ள ரூ. 255 கோடி சொத்துக்களும் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டதின் கீழ் முடக்கப்பட்டது.



இந்நிலையில் தற்போது நீரவ் மோடிக்கு சொந்தமாக துபாயில் உள்ள ரூ.56 கோடி மதிப்பிளான சொத்துக்களும் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டதின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.


பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள வைர வியாபாரி நீரவ் மோடி வெளிநாட்டில் தங்கி உள்ளார். அவர் மீதான வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 


இந்நிலையில் இன்று காலை பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்‌ஷியின் உதவியாளர் தீபக் குல்கர்னி அமலாக்க துறையால் கொல்கத்தாவில் வைத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.