கான்பூரில் உள்ள மருத்துவமனையில் ஏ.சி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. உ.பி அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனை இது. இங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகள் உட்பட 11 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்தனர். மருத்துவமனையின் ஏ.சி இணைப்பு பெரும்பாலான நேரம் அணைத்து வைக்கப்பட்டிருக்குமாம். மின்விசிறியும் கிடையாது. இதனால், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் காற்றோட்டம் இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர்.


கடும் வெயில் மற்றும் புழுக்கத்தால், நோயாளிகளின் உறவினர்கள் டேபிள் ஃபேன் வைக்க அனுமதி அளிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். டேபிள் ஃபேன் எல்லாம் வைக்கக் கூடாது என மருத்துவமனை மறுத்துவிட்டது. நேற்றிரவு முழுவதும் காற்றோட்டம் இல்லாமல் அவசர சிசிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர். 


இதையடுத்து, நோயாளிகள் 11 பேரில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட நீதிபதி சுரேந்திர சிங், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினார். உடனடியாக 2 ஏசி இயந்திரங்களைப் பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளார்! 



கடந்த ஆண்டு உ.பி கோரக்பூர் மருத்துவமனையில், ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் இறந்தது குறிப்பிடத்தக்கது!!