பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி  குல்பூஷண் ஜாதவின் வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் இன்றுமுதல் விசாரணைக்கு வருகிறது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து, இந்தியா சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை (இன்று) முதல் விசாரணை நடைபெறவுள்ளது.


பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத செயல்களை தூண்டியதாகவும் 48 வயதுடைய குல்பூஷண் ஜாதவ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி, கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதையடுத்து, அந்த தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2017 மே 18 ஆம் தேதி, சர்வதேச நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் குல்பூஷண் ஜாதவுக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில், திங்கள்கிழமை முதல் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது. இந்தியாவின் சார்பில் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடவுள்ளார். பாகிஸ்தான் சார்பில், பிரிட்டன் ராணியின் வழக்குரைஞராக செயல்படும் கவார் குரேஷி ஆஜராகி, வாதாட உள்ளார்.


சர்வதேச நீதிமன்றத்தின் இணையதளம், ஐ.நா.வின் இணையதள தொலைக்காட்சி மற்றும் ஐ.நா.வின் தொலைக்காட்சி அலைவரிசை ஆகியவற்றில், வழக்கு விசாரணை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் முடிவில், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு கோடை காலத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், திங்கள்கிழமை தொடங்கி வியாழக்கிழமை (பிப்.21) வரையில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.