இந்த வார தொடக்கத்தில் பாஜக-வுக்கு மாறிய 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்று பேருக்கு, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று விரிவுபடுதிய புதிய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிலிப் நேரி ரோட்ரிக்ஸ், ஜெனிபர் மொன்செரட் மற்றும் சந்திரகாந்த் கவ்லேகா ஆகியோர் கோவா அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரகாந்த் கவ்லேகர் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.


கோவாவில் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்த போது, 40 பேர் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 15 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். கூட்டணியில் இருந்த கோவா பார்வர்ட் பார்ட்டியின் 3 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களின் தயவில் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போது காங்கிரசுக்கு 17 எம்எல்ஏக்கள் இருந்தும், கூடுதல் இடங்களைப் பெற்றிருந்த அக்கட்சியை முதலில் ஆட்சி அமைக்க அழைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரிக்கர் அமைச்சரவையில் கோவா பார்வர்டு கட்சியின் விஜய் சர்தேசாய் துணை முதல்வராக இருந்தார்.


மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பின்னர், பிரமோத் சாவந்த் இப்போது முதல்வராக உள்ளார். இவருடைய அமைச்சரவையிலும் விஜய் சர்தேசாயுடன், பாஜகவின் மனோகர் அஜான்கர் ஆகிய இருவரும் துணை முதல்வர்களாக உள்ளனர்.காங்கிரசின் 2 எம்எல்ஏக்கள் ஏற்கனவே பாஜகவில் இணைந்ததால் அக்கட்சியின் பலம் 17 ஆக இருந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் நேற்று பாஜகவில் இணைந்து விட்டனர். இதனால் பாஜக 27 எம்எல்ஏக்களுடன் மெஜாரிட்டி பலம் பெற்றுள்ளது.


இதனையடுத்து புதிதாக இணைந்துள்ள எம்எல்ஏக்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடமளிக்க பாஜக தலைமை முடிவு செய்தது. இதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்களுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆலோசனை நடத்தினார்.


இந்நிலையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று விரிவுபடுதிய புதிய அமைச்சரவையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.