போலி விசா மூலம் படிக்க வந்ததாக அமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் விசா மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அதனை தடுப்பதற்கு போலிப் பல்கலைக்கழகம் ஒன்றை அமெரிக்க போலீசார் தொடங்கியது. இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.


இதற்காக அமெரிக்காவில் உள்ள ஏஜெண்டுகள் சிலர் அந்த பல்கலைக் கழகத்தில் பயிற்றுவதாகக் கூறி, 5 ஆயிரம் டாலரில் இருந்து 20 ஆயிரம் டாலர் வரை கமிஷன் வாங்கிக் கொண்டு F1 என்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி விசா பெற்றதை அமெரிக்க போலீசார் கண்டறிந்துள்ளனர்.


இதைத்தொடர்ந்து போலிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 130 பேரில் 129 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் 130 பேரும் அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது.


இந்நிலையில், இவ்விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அரசியல் ரீதியான நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது.


இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ள  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘விசா மோசடி மூலம் மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த இடைத்தரகர்களையும் தற்போது கைதாகியுள்ள இந்திய மாணவர்களையும் அமெரிக்க அரசு ஒரேமாதிரியாக பார்க்க கூடாது.


இந்திய மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேசமயம் கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவில் 24 மணி நேரமும் செயல்படும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


கைதான மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்பு கொள்ள தனிப் பிரிவையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது. மேலும் cons3.washington@mea.gov.in என்ற இமெயில் முகவரியிலும் பெற்றோர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.