வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு முல்லைப் பெரியாறு அணையின் வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட்டதே காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநில அரசின் சார்பில் மாநிலத் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கேரளத்தின் வெள்ளப்பாதிப்புக்கு முல்லைப் பெரியாற்றில் ஆகஸ்டு 15ஆம் தேதி வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட்டதே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். முதலில் நொடிக்கு ஒன்பதாயிரம் கனஅடி நீரும், பின்னர் நொடிக்கு 21ஆயிரத்து 450கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி அதிகம் என்றும், அதன் கொள்ளளவு குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இதனால் அதிக மழை பெய்யும்போது ஒருநாளில் வரும் நீர்ப்பெருக்கைத் தாங்கும் அளவில் அதன் உச்சநீர்மட்டத்தில் இருந்து நீர் தேக்கும் அளவைக் குறைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். அணையின் நீர்மட்டம் 136அடியை எட்டும்போதே அணையின் வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். வெள்ளநீர் மதகுகளைத் திறப்பதற்குப் புதிய அட்டவணை தயாரிக்கவும் நீர்தேக்கும் அளவை உயர்த்தியதைத் திரும்பப் பெறவும் மேற்பார்வைக் குழுத் தலைவரிடம் தாங்கள் கோரிக்கை விடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார்.


மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளரைத் தலைவராகவும், இருமாநிலத் தலைமைப் பொறியாளர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட மேலாண்மைக் குழுவை அமைத்து அணையின் செயல்பாடுகளை நிர்வகிக்க வேண்டும் எனவும் இந்தக் குழு அன்றாடச் செயல்பாடுகளை மேற்பார்வைக் குழுவுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.