முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முத்தலாக் முறைக்கு தடைக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு, ‘இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வது இஸ்லாமிய மதத்தின் மரபாகும். இது, பெண்களுக்கு எதிரான அடக்குமுறையாக கருதப்படுவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், முத்தலாக் முறை செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றம் பச்சைக்கொடி காட்டிய முத்தலாக் மசோதாவில், திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில், முத்தலாக் மசோதா திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.


இந்நிலையில், பாராளுமன்றத்தில்  முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இதை தாக்கல் செய்தார். ‘முத்தலாக்’ முறைக்கு தடை விதிக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா’ மக்களவையில் நிறைவேறி விட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.


இந்த நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுவதாக தீர்ப்பு வழகியது.  


இந்த அவசர சட்டத்தின் படி உடனடியாக முத்தலாக் கூறினால் அது சட்டப்படி குற்றமாகும். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சமஸ்தா கேரளா ஜமியுதுல் உலாமா என்ற அமைப்பு இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது. சமூகத்தில் இது மத ரீதியான அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடியது என்றும், ஒருவரின் மத அடையாளத்தை வைத்து அவரைப் பழிவாங்குவதற்காக பயன்படுத்தப்படும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.