கேரளாவின் எதிர்ப்பின் சுவர்: லட்சக் கணக்கான பெண்கள், ஆணாதிக்கத்திற்கு எதிராக கலந்து கொண்டுள்ளனர்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் சபரிமலை விவகாரத்தால் கேரள மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்து, கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில பெண்கள் லட்சக்கணக்கானோர் நேற்று 620 கிமீ நீள மனித சங்கிலியில் நின்று, பெண்கள் சம உரிமைக்காகவும், மறுமலர்ச்சி கொள்கைகளுக்காகவும் போராட்டம் நடத்தினர்.


சபரிமலையில் வயது வரம்பின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, கேரள மாநிலத்தில் இந்து அமைப்புகளும் பல்வேறு வலதுசாரி அமைப்புகளும் தொடர் போராட்டங்கள் நடத்தினார்கள். கேரள முதல்வர் பினராய் விஜயன், உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் திட்டவட்டமாக இருந்ததால், அரசுக்கு எதிரான போராட்டமாக இவை மாறின. முதல்வரின் நடவடிக்கைக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.


இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்த, முதல்வர் பினராயி விஜயன் கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்தார். புத்தாண்டன்று இந்த போராட்டம் நடைபெறும் என்றும் பல்வேறு பெண்கள் முன்னேற்ற அமைப்புகள் இதில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் அழைப்பு  விடுத்திருந்தார். இன்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான கேரள பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவிகள், ஒருசில இந்து அமைப்புகளை சேர்ந்த பெண்கள் என லட்சக்கணக்கான பெண்கள், சுமார் 620 கிலோமீட்டர் நீளத்திற்கு கைகோர்த்து நின்று தங்களது ஒருமைப்பாட்டை காட்டினார்கள்.சாலையின் ஒரு புறத்தில் பெண்கள் கைகோர்த்து நிற்க, மறுபுறத்தில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஆண்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நின்றனர். 


நேற்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அனைவரும் சேர்ந்து மகளிர் சம உரிமைக்கும் மறுமலர்ச்சி கொள்கைகளுக்கும் ஆதரவு தெரிவிப்போம் என வாக்குறுதி எடுத்துக்கொண்டனர்.திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் கே.வாசுகி, கூடுதல் தலைமை செயலாளர் ஆஷா தாமஸ் உட்பட பல அரசு அதிகாரிகளும், நடிகை ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட திரைபிரபலங்களும் இதில் கலந்து கொண்டனர்.