வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனில் தலைமறைவாக இருந்த வைர வியாபாரி நிரவ் மோடி கைது என தகவல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டனில் கைதான நிரவ் மோடியை மீண்டும் மார்ச் 29ல் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு!!



பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி வரை கடன் பெற்ற திருப்பியளிக்காமல் வெளிநாடு தப்பி சென்றதாக தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோரின் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தனித்தனியே முறைகேடு வழக்கு தொடுத்திருந்தனர்.


இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமாக இந்தியாவில் இருக்கும் ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 25-ஆம் நாள் நீரவ் மோடிக்கு சொந்தமாக ஹாங்காங்கிலுள்ள ரூ. 255 கோடி சொத்துக்களும் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டதின் கீழ் முடக்கப்பட்டது.


இதையடுத்து, 14 ஆயிரம் கோடி ரூபாய் பஞ்சாப் நேசனல் வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரிகளும் உறவினர்களுமான நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர். 


இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தஞ்சமடைந்திருப்பது தெரியவந்தது. லண்டன் வீதிகளில் அவர் நடந்து சென்ற காட்சி வெளியானது. புதிதாக வைரம் விற்பனை நிறுவனத்தை அவர் தொடங்கியிருக்கிறார் என்றும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.


இதனைத் தொடர்ந்து நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.





இந்த நிலையில் லண்டன் காவல்துறையினர் நிரவ்மோடியை கைது செய்துள்ளனர். ஹால்போன் மெட்ரோ நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நிரவ் மோடி கைது செய்யப்பட்டதை அமலாக்கத்துறையும் உறுதிப்படுத்தி இருக்கிறது.


ஏறத்தாழ17 மாதங்களுக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் நிரவ்மோடி ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான விசாரணை நடத்தப்படும். இதற்கிடையே நிரவ்மோடியின் சொத்துக்களை அமலாக்கதுறை விற்பனை செய்ய சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


நிரவ்மோடிக்கு சொந்தமான 173 ஓவியங்கள், 11 கார்களை விற்பனை செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நிரவ்மோடியின் மனைவி அமி மோடிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதே போன்ற வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கை லண்டன் உள்துறையின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.