பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த உத்தி என ப.சிதம்பரம் குற்றசாட்டு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி : பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த யுக்தி  என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  


கடந்த 2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இனிமேல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியதோடு, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அப்போது தெரிவித்தார்.


முன்னதாக பிரதமர் மோடி ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்கள் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்கள் சிலர் இந்த கருத்தை ஏற்க மறுத்துள்ளனர்.


இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எந்தப் பயனும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. ஆனால், பிடிவாத அரசு அந்த முரட்டுத்தனமான முடிவை எடுத்தது. ரிசர்வ் வங்கி எச்சரித்தது தானே நடந்திருக்கிறது? எத்தனை சிறு தொழில்கள் நசிந்தன? எத்தனை பேர் வேலை இழந்தார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டு பிடித்த உத்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.