நியூயார்க்: உலகின் மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் 10 பேரில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 74 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த பட்டியலின் மிகவும் சக்திவாய்ந்த டாப்-10 பிரபலங்களில் இந்திய பிரதமர் மோடி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.


1.3 பில்லியன் மக்கள்தொகைக் கொண்ட இந்தியாவில், நாட்டின் மிக சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். 


கருப்புப் பணம், கள்ளப் பணம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக, இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்றும் கடந்த மாதம் அதிரடியாக அறிவித்தார் பிரதமர் மோடி.


7.4 பில்லியன் மக்களைக் கொண்ட இந்தப் பூமிப் பந்தில், 74 தலைவர்கள் உலகை மாற்றியமைக்கும் வல்லமையுடன் திகழ்கிறார்கள் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சக்தி வாய்ந்த தலைவர்களின் பட்டியலில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.


அவருக்கு அடுத்து உலகின் மிக சக்தி வாய்ந்த பெண் தலைவராக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். சீன அதிபர் ஜீ ஜின்பிங் 4-வது இடம், போப் பிரான்சிஸ் 5-வது இடம் "மைக்ரோசாஃப்ட்' இணை நிறுவனர் பில்கேட்ஸ் 7-வது, "ஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பக் 10-வது இடம், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் 23-வது இடம், ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் 32-வது இடம், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் 43-வது இடம் பிடித்துள்ளனர்.


ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி, தகவல் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, 38-வது இடத்தையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, 48-வது இடத்தையும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, 51-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.