பீகார் மாநில மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் மாநில மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ரவிசங்கர் பிரசாத் சமீபத்தில் நடைப்பெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியானது.


இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு தற்போதைய அமைச்சரவையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதனால், அவர் ஆறு மாதங்களுக்குள் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்.


அதன்படி, பீகார் மாநிலத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அவரது பெயர் பாஜக சார்பில் பரிந்துறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


அதுபோன்று ஒடிசாவில் இருந்து பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த இருவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். மூன்றாவது வேட்பாளராக பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி வைஷ்ணவ் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு பிஜூ ஜனதாதளம் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


தமிழகத்தை பொருத்தவரையில் பாஜக-வின் கூட்டணியில் இருக்கும் அதிமுக சார்பில் 3 பேர் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு போட்டியிடலாம். இருப்பினும் இந்த 3 இடங்களில் ஒன்று பாஜக-விற்கு அளிக்கப்படுமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.