எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி ₹453 கோடி கடன் பாக்கியை செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மீது எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நான்கு வாரத்திற்குள் ₹453 கோடி கடன் பாக்கியை தர வேண்டும், இல்லையேல் மூன்று மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மீது எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ₹550 கடன் பாக்கி செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவாலாகி விட்டதாகவும், தங்கள் நிறுவன சொத்துக்களை விற்க, கடனை திருப்பிச் செலுத்த முடிவு செய்திருப்பதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவர் அனில் அம்பானி அறிவித்திருந்தார். 


ஆனால் எவ்வளவு முயன்றும் தனது சொத்துக்களை விற்க முடியவில்லை என கூறி எரிக்சன் நிறுவனத்திற்கு சிறிய அளவிலான தொகையை மட்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திருப்பிச் செலுத்தியது. 


உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறியதால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது எரிக்சன் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று தீர்ப்பளித்தது. இன்று வெளியான தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது... "அனில் அம்பானி மற்றும் 2 இயக்குனர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. மேலும் 4 வாரங்களில் எரிக்சன் நிறுவனத்திற்கு ₹453 கோடி பாக்கியை அளிக்க வேண்டும். பணத்தை திருப்பித்தர தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும். குற்றவாளிகள் 3 பேரும் தலா ₹1 கோடி அபராதம் செலுத்த வேண்டும். அதனை ஒரு மாத காலத்திற்குள் செலுத்தாவிட்டால் ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளது.