புதுடெல்லி: டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து டாடா குழும தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நடராஜன் சந்திரசேகரன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடராஜன் சந்திரசேகரன் தற்போது டிசிஎஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். வரும் பிப்ரவரி 22-ம் தேதி தலைவராக பொறுப்பேற்பார்.


டாடா சன்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில் டாடா குழுமத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் வர்த்தக பணிகளை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் சைரஸ் மிஸ்த்ரி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.


சைரஸ் மிஸ்த்ரியை தொடர்ந்து, டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக, அடுத்த 4 மாதங்களுக்கு ரத்தன் டாடா செயல்படுவார். அதன்பின், புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்டதை தொடர்ந்து டாடா சன்ஸ் நிறுவனத்தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடா தலைமையிலான 5 பேர் குழு நிறுவன தலைவரை தேர்வு செய்தது.


53 வயதாகும் நடராஜன் சந்திரசேகரன் நாமக்கல் அருகே மோகனுரில் 1963-ல் பிறந்தார். கோவை சிஐடியில் இளங்கலை அப்ளைடு சயின்ஸ் திருச்சி ஆர்.இ.சி கல்லூரியில் முதுகலை கம்யூட்டர் அப்ளிகேசன் படித்துள்ளார். இவரது மனைவி பெயர் லலிதா. மகன் பிரனவ். இருவரும் மும்பையில் வசிக்கின்றனர்.


1987-ம் ஆண்டு டாடா நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் சந்திரசேகரன், படிப்படியாக உயர்ந்த இவரால் டாடா நிறுவனத்தின் வர்த்தகமும் உயர்ந்தது. 


நாஸ்காம் தலைவராக 2012 - 2013-ம் பதவி வகித்துள்ளார். 53 வயதாகும் நடராஜன் சந்திரசேகரன் தற்போது டாடா சன்ஸ் நிறுவனங்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.