பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பார்கள் என்ற எண்ணத்த்தில், இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 


இந்நிலையில், தற்போது நீட் தமிழ் வினாத்தாள் குளறுபடியால், மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொறியியல் கலந்தாய்விலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டுமே முடிவுற்றதையடுத்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. 


இதையடுத்து, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை 31 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் நீட் விவகாரத்தால் பொறியியல் கலந்தாய்வை நடத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 


இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.