உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கு இருவர் பெயரை மத்திய அரசு நிராகரித்த நிலையில், மீண்டும் பரிந்துரை செய்துள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலிஜியம் பரிந்துரைத்த இரண்டு நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்த நிலையில், மீண்டும் அதே இரண்டு நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 


ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ், கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம், மத்திய அரசுக்கு ஏற்கனவே பரிந்துரைத்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் சீனியாரிட்டி குறைவாகவே உள்ளது என்று கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டது. 


இதைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட இருவரது பெயரை, கொலிஜியம் மீண்டும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இவர்கள் இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் சூழ்நிலை உள்ளது என்றும், இவர்கள் இருவரையும் நீதிபதிகளாக நியமிக்க உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. கொலிஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளதால், இவர்கள் இருவரையும் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும், இவர்கள் தவிர, பாம்பே உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவை (Justice B.R.Gavai) மற்றும் ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி சூர்யா கந்த் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட 27 நீதிபதிகள் பதவியில் உள்ளனர். 4 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதில் 4 பணியிடங்களுக்கு தான், தற்போது நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.