முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதி சடங்கில் அரசு சார்பில் செலுத்தப்பட்ட மரியாதையில் 22 துப்பாக்கிகள் செயல்படவில்லை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (வயது 82), கடந்த சில நாட்களாக முதுமை சார்ந்த உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 19 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். 


ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல் மந்திரி ஆவார். இவர் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தற்போதைய பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், அவரது மறைவிற்கு பீகாரில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறினார். இதனையடுத்து சுப்பாவுல் பகுதியில் உள்ள ஜெகன்நாத்தின் சொந்த கிராமத்திற்கு அவரது உடல் தகனத்துக்காக கொண்டு செல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நேற்று தயார் நிலையில் இருந்தன. அரசு சார்பில் துப்பாக்கிகள் முழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 



இந்நிலையில், ஜெகன்நாத்தின் உடல் தகனம் செய்யப்படும் போது, 22 துப்பாக்கிகளுடன் காவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். துப்பாக்கிகளை வானை நோக்கி உயர்த்தி சுடும் போது அவை முழங்கவில்லை. மீண்டும் முயற்சித்து பார்த்துள்ளனர். அப்போதும் முழங்காமல் இருந்தன. இச்சம்பவம் குறித்து இறுதி சடங்கில் கலந்துக் கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ யதுவன்ஷ் குமார் யாதவ் கூறுகையில், ‘பீகாரின் முன்னாள் முதல்வரான ஜெகன்நாத்துக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானம். இதனை உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.